சூ. 115 :

ஆறன் உருபின் அகரக் கிளவி

ஈறாகு அகரமுனைக் கெடுதல் வேண்டும்

(13)
 
க-து:

ஒருசார்புணர்ச்சிக்கண்   ஆறாம்   வேற்றுமை உருபிற்காவதொரு
விதி கூறுகின்றது.
 

பொருள்:ஆறாம்வேற்றுமை     உருபாகிய      அது      என்னும்
இடைச்சொல்லின்கண் நிற்கும் அகரமாகிய எழுத்து நிறுத்தசொல்லின் ஈறாக
வரும் அகரத்தின் முன் குன்றும்.
 

ஆகும்  அகரஈறு  என்றதனான் அஃது இயல்பீறன்று; விதியீறு என்பது
பெறப்படும். அவை நெடுமுதல் குறுகி அகரச்சாரியைப் பெற்று நிற்கும்.என,
தன, நும, நம, எம, தம, நின என்பனவாம்.
 

எ-டு :எனது வீடு, தனது வீடு, நினது வீடு, எமது வீடு, நமது வீடு,தமது
வீடு,   நுமது  வீடு    எனவரும்.  என முதலியவற்றுள்  நிற்கும் சாரியை
அகரத்திற்குக்   கேடுகூறாமல்   உருபின்     அகரத்திற்குக்    கூறியதன்
காரணம்,   அச்சாரியை    நான்கனுருபிற்கும்  ஆறனுருபிற்கும் பொதுவாக
விதிக்கப்பட்டமையான் என்க.
 

‘நினவ   கூறுவல்   எனவ   கேண்மதி’  என்பதனை எடுத்துக் காட்டி
நச்சினார்க்கினியர்     கூறும்    அமைதி   பொருந்துமாறில்லை.  அவை
குறிப்புவினைமுற்று விகுதியாதலன்றி உருபாகாமையின் என்க.