சூ. 124 :

ஆனின் னகரமும் அதனோ ரற்றே

நாள்முதல் வரூஉம் வன்முதற் றொழிற்கே

(22)
 
க-து:

ஆன்சாரியை பொருட்புணர்ச்சிக்கண் திரியுமாறு கூறுகின்றது.
 

பொருள் :நாட்பெயராகவரும்  சொல்லிற்கும்  வல்லெழுத்தை முதலாக
உடைய   தொழிற் சொற்களுக்கும் இடையே வரும் ஆன்சாரியையது னகர
ஒற்றும் முற்கூறிய ஆன் சாரியை போல றகரமாகத் திரியும்.
 

எ-டு:பரணியாற்கொண்டான் - ஆதிரையாற்கொண்டான்,   சென்றான்,
தந்தான், போயினான் எனவரும்.
 

இனி, இன்சாரியையினது    னகரஒற்று   வல்லெழுத்து முதலாய பெயர்,
வினைகள் வரின் றகரமாகத்திரியும் என்னும் விதிபற்றிய  சூத்திரம்  இதற்கு
முன்னமைந்திருத்தல்      வேண்டும்.    என்னை?  பனியிற்கொண்டான்,
வளியிற்கொண்டான், பறம்பிற்பாரி,   குறும்பிற்கொற்றன்     என்றாற்போல
இன்சாரியை  பயின்று  வருதலானும், ‘‘ஆனின் னகரமும் அதனோ ரற்றே’’
என  ஒருமையாகச்  சுட்டப்பட்டிருத்தலானும்  என்க.  உரையாசிரியன்மார்
இத்திரிபினை உம்மையானும் உத்தியானும் தழுவிக் கொண்டனர்.