சூ. 127 :

ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும்

(25)
 
க-து:

இதுவுமது.
 

பொருள்:  இக்குச்    சாரியையின்     இகரம்    இகர  ஈற்றுச்சொல்
முன்னரேயன்றி ஐகார ஈற்றுச்சொல்முன்னரும் அவ்வியல் பெற்று  நிற்கும்.
 

எ-டு:  சித்திரை + இக்கு + கொண்டான் = சித்திரைக்குக்  கொண்டான்
எனவரும்.  திங்கள்  முன்வரின்  ‘இக்கேசாரியை’  என்பது   விதியாகலின்
இவை    இக்குப்    பெற்றன.   ஐகார    ஈறு    இகரத்தொடு    ஓசை
ஒற்றுமையுடையதாகலின் சாரியை விதி ஒத்ததாயிற்று.
 

இக்குச் சாரியை இடப்பொருட்டென்பார்   நச்சினார்க்கினியர்.  சித்திரை
முதலாய திங்களின்கண் நிகழும் விழா    முதலிய   சிறப்பு  நிகழ்ச்சிகளிற்
புரவலராயினர்  நல்கும் பரிசு முதலாயவற்றைக்     கோடல்  மரபாகலின்,
பொருட்டு என்னும் நான்காவதன் பொருளாகக் கோடலே சால்பாகும் என்க.