|
சூ. 132 : | பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப | | வேற்றுமை உருபு நிலைபெறு வழியும் | | தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் | | ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் | | சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது | | இடைநின் றியலும் சாரியை இயற்கை | | உடைமையும் இன்மையும் ஒருவயின் ஒக்கும் | (31) | க-து: | உருபு புணர்ச்சிக்கண்ணும் பொருட் புணர்ச்சிக்கண்ணும் இடைவருமென விதிக்கப்பெறும் சாரியைமொழிகளின்றி அப்புணர்மொழிகள் வாராவோ என்னும் ஐயம் நீங்க அவை ஒரோவழி வருதலும் வருதலின்மையும் ஒக்குமென இடைநின்றியலும் சாரியைகட்கு ஆவதொரு புறனடை கூறுகின்றது. | பொருள் :பெயர்ச்சொல்லும் தொழிற்சொல்லும் தம்முள் பெயரும் வினையுமாக வேறுபட்டும், பெயரும் பெயருமாக ஒன்றுபட்டும், புணர்ந்து இசைக்குங்கால், வேற்றுமை உருபுகள் மறையாமல் நிலைபெறுமிடத்தும், அவ்வுருபுகள் தோன்றுதல் வேண்டாமல் அப்பொருள்படத் தொக்குவருமிடத்தும், நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் இயைவதற்கேற்ப நடந்த இருவகை வழக்கொடு பொருந்தி, அப்புணர்மொழிகள் பிரிந்து நிற்குமிடத்துச் சொல்லின் ஈற்றினின்றியலும் சாரியைபோல,ஒன்றன் வழிவந்து தோன்றாமல் பொருள்நிலைக்குதவுவனவாய் அவற்றின் இடையே வந்து அவற்றை இணைப்பதற்கு இயலும் சாரியை மொழிகள், ஒரோவிடத்து வருதலுடைமையும், வருதலின்மையும் ஒக்கும் இயற்கையவாகும். இயற்கை = இலக்கணம். | பெயருந்தொழிலும் இசைப்ப உருபுநிலை பெறுவழியும், தொகுதிக்கண்ணும், வழக்கொடு சிவணி,இடைநின்றியலும் சாரியை சொற்சிதர் மருங்கின் உடைமையும் இன்மையும் ஒக்கும் இயற்கை ஆம்-எனக் கூட்டிமுடிக்க. ‘சாரியை’ எழுவாய்;‘இயற்கை’ பெயர்ப்பயனிலை. ஒரோவயின் என்பது இசை கருதி ஒருவயின் என நின்றது. | இச்சூத்திரத்தான் வழிவந்து விளங்கும் சாரியை, இடை நின்றியலும் சாரியை எனச் சாரியை இருவகைத்தாகும் என்பதும், உருபுதொக்குவரும் வேற்றுமைப்புணர்ச்சி வேற்றுமைப் பொருட்புணர்ச்சி ஆம் என்பதும் புலனாகும். |
முன்னர், ஒழுக்கல் வலிய (சூ-10) என்றது, ‘ஒட்டுதற்குரிய வழக்கு’ என ஈண்டு விளக்கினார். இடைநின்றியலும் என்பதைப் ‘‘புணரியல் நிலையிடைப் பொருள்நிலைக் குதநவும்’’ என இடைச்சொல்லோத்தினுள் கூறுவார். மான், கோஒன் என்றாற் போல்வன வழிவந்து விளங்கும் சாரியைகள். அக்கு, இக்கு, அத்து, வற்று என்றாற் போல்வன இடைநின்றியலும் சாரியைகளாம். | வேற்றுமைஉருபு நிலைபெறுவழியும் என்றது உருபு புணர்ச்சியை. தோற்றம் வேண்டாத்தொகுதி என்றது பொருட்புணர்ச்சியையாம். | எ-டு :ஆவைக் கொணர்ந்தான், ஆவினைக் கொணர்ந்தான்; பூவொடு மணந்த கூந்தல், பூவினொடு மணந்த கூந்தல்; சொற்குப் பொருள், சொல்லிற்குப் பொருள்; நெல்லது பொரி, நெல்லினது பொரி; தேர்க்கண் நின்றான், தேரின்கண் நின்றான் - எனவரும். இவை வேற்றுமை உருபு நிலைபெற்றவழிச் சாரியை உடைமையும் இன்மையும் ஒத்தன. | சாரியை பெற்றேவருவன வருமாறு: மரத்தை வெட்டினான், பலவற்றொடு முரணினான், கூழிற்குக் குற்றேவல் செய்தான்,ஆவினது கன்று,நிலாவின்கண் ஒளி எனவரும். | மகக்கை - மகவின்கை - மகத்துக்கை. மண்குடம் - மண்ணின் குடம் - மண்ணினாகிய குடம். கரும்புவேலி - கரும்பின் வேலி. பலாஅக்கோடு - பலாவின்கோடு - பலவின்கோடு. புறம் நின்றான் -புறத்தின்கண் நின்றான் எனவரும். இவை பொருட்புணர்ச்சிக்கண் சாரியை உடைமையும் இன்மையும் ஒத்தன. சாரியை பெற்றேவருவன வருமாறு: விண்ணத்துக்கொட்கும், வெயிலத்துச் சென்றான், ஆடிக்குக்கொண்டான், பரணியாற் கொண்டான் எனவரும். மலையின் வீழ்அருவி, மலையருவி என ஐந்தாம் வேற்றுமை விரிந்துவரினும் தொக்குவரினும் சாரியை பெறாதே வரும். | இனி,இந்நூற்பாவின் இறுதியடியின் பாடத்தை ‘‘உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்’’ எனக்கொண்டு ஒடு உருபின்கண் சாரியை வருதலும் வாராதாதலும் ஒக்கும் என உரைகூறினர் உரையாசிரியன்மார். அஃது ஆசிரியர் கருத்தாயின் முதல் ஐந்தடிகளும் வெற்றெனத் தொடுத்தலாய் முடியும், அன்றியும் அஃது உருபியலுள் ஓதப்படுவதன்றி ஈண்டைக்காகாது. மற்றும் மேற்கூறிய இலக்கண விதிகள் எல்லாம் பெறப்படாமல் குன்றக்கூறலாயும் முடியுமென்க. பொருட்புணர்ச்சிக்கண்ணும் சாரியை வரும் என்னும் இன்றியமையாத இலக்கணம் இந்நூற்பாவான் பெறப்பட்டமை அறிக. |
|