சூ. 14 :உட்பெறு புள்ளி உருவா கும்மே

(14)
 

க-து:

மேற்கூறிய மகரக்குறுக்கத்திற்கு உருவும் ஒலிஅளவும்
கூறுகின்றது.
 

பொருள்: அரையளபு   குறுகும்   மகரம்   இதழியைந்து   பிறவாமல்
இதழ்சிறிது உள்வாங்க ஒடுங்கிப்பெறும் ஒலியளவிற்கேற்ப உருவாகி நிற்கும். உட்பெறுதலாவது இதழ்  உள்மடங்கி   நிற்றல். இதழ்   மடங்கும் என்பது ‘‘இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்’’ என்பதனாற் பெற்றாம்.
 

அரைமாத்திரையுற்றுவரும்   மகரம்   வாய்இதழ்கள்   நன்கு  இயைய
உருவாகும்.  குறுகிய  மகரம்  இதழியையாமல்  சிறிது  உள்மடங்கி  நிற்க
உருவாகும் என்பார், ‘‘உட்பெறு புள்ளி  உருவாகும்’’  என்றார்.  இதனான் அதன் ஒலிப்பளவும் தோன்ற வைத்தார்.
 

ஒப்பக்கூறல்  என்னும்    உத்தியான்,   முழுமகரத்திற்கும்   இதற்கும்
வரிவடிவின்கண்   வேற்றுமை    தோன்ற   அவ்வெழுத்தகத்தே   புள்ளி
(கீற்று) அடையாளம்  செய்து  கொள்ளப்பெறும்.  எல்லா  எழுத்துக்கட்கும் வடிவ இலக்கணங்கூறும் பிறப்பியலுள் இதனைக்கூறாமல்  ஈண்டே கூறினர், ஒருவழிக்கூறல்  என்னும்  உத்திபற்றி  என்க.  இதனை  மொழிமரபின்கண் வையாமல் ஈண்டு வைத்ததற்கும் அதுவே  காரணம் என்க.  எடுத்துக்காட்டு மேற்காட்டப்பெற்றது. இதன் இக்கால வரிவடிவம்(ம்). இடைக்கால வடிவமும் ஆசிரியர் காலத்து வரிவடிவமும் காணுமாறில்லை.