சூ. 140 :

எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

உடம்படு மெய்யென் னுருபுகொளல் வரையார்

(38)
 
க-து:

உயிரீற்றின்   முன்    உயிர்   முதன்மொழி வருங்கால் எய்தும்
முறைமை கூறுகின்றது.
 

பொருள்: உயிரீறாகி  நிற்கும்  ஓரெழுத்தொருமொழி முதலாய எல்லா
மொழிக்கும்,    குறித்துவருகிளவி   உயிர்  முதலாகி வருமிடத்து இடையே
உடம்படுமெய் என்னும் ‘உருபு’ கோடலை நீக்கார் ஆசிரியர்.
 

மேல் புள்ளியீற்றின் முன் உயிர்வரின் எய்தும் நிலைமை கூறினமையான்
ஈண்டு    எல்லா    மொழிக்கும்   என்றது உயிரீற்று  மொழிகள் என்பது
உய்த்துணரப்படும். இயல்பீறும் விதியீறும்  அடங்க      எல்லாமொழிக்கும்
என்றார். இவ்விதியும் நால்வகைச் சொற்கும் பொது எனக்கொள்க.
 

இவ்உடம்படுமெய்கள் எழுத்தும் சாரியையும் போலப்  பொருள்நிலைக்கு
உதவவாராமல்     இரண்டு   உயிர்களை  இணைப்பதற்கு  ஆசாக வந்து
பொதுப்பட நிற்றலின், ‘‘உடம்படுமெய்’’ என வாளா கூறாமல்‘‘உடம்படுமெய்
என்னும் உருபு’’ என்றார். அவை யகரமெய்யும் வகரமெய்யுமாம் என்பதனை
ஆசிரியர்    உடம்பொடு    புணர்த்துக்    கூறுவதனானும்    சான்றோர்
செய்யுட்களானும் உணரலாம்.
 

‘‘உடம்படுமெய்யின்    உருவு     கொளல்’’    என்று பாடமோதுவார்
உரையாசிரியன்மார். அப்பாடத்திற்குப் பொருள் நோக்கின்மையறிக.
 

பேச்சு    வழக்கினும்     உரைநடை    வழக்கினும்   உடம்படுமெய்
கொள்ளாதொழியினும் செய்யுட்கண் ஓசை இயைபு செய்தலின்   ஒருவந்தம்
கொள்ளல் வேண்டுமென்பார் ‘‘வரையார்’’   எனக்கூறினார்.   ஒருமொழிப்
புணர்ச்சிக்கண் நிற்கும் உயிரும்,   புணர்ச்சி  விகாரத்தான் மிகும் உயிரும்
உடம்படுமெய்பெறா என அறிக.
 

எ-டு:  விளவழகு,  சிலவுயிர், நிலாவெழுந்தது, விழியழகிது,தீயெழுந்தது,
கடுவோங்கிற்று, பூவழகிது, ஆடூஉவறிசொல், சேவெழுந்தது, மலையதிர்ந்தது,
கோவெதிர்ந்தான், வௌவிழிந்தது  எனவரும்.   எகர ஒகரங்கள் எவ்வணி,
நொவ்வுற்றான் என இரட்டித்து வரும்.
 

பெரும்பான்மையும் இகர, ஈகார, ஐகார ஈறுகளின்முன் யகரமும் ஏனைய
உயிரீறுகளின் முன் வகரமும், ஏகாரத்தின்முன் மேயினான், மேவினான் என
இரண்டும் வரும். சிறுபான்மை மாயிரு ஞாலம்,  கோயில்   என   ஆகார
ஓகாரங்கள்   யகரமும் பெறும். இவை இயல்பீறு. ‘ஆயிருதிணை’   என்பது
விதியீறு.
 

இனிச்,   சார்வுழி,   செல்வுழி  எனவும் விண்வத்துக்கொட்கும் எனவும்
புள்ளியீற்று  முன்   வந்த   வகரம்   எடுத்தலோசையான்   வந்தவிகாரம்
என்க. வழுவமைதி  எனினுமாம்.  ‘வரையார்’  என்றதனான் உடம்படுமெய்
பெறுதல்    ஒருதலையன்று   எனக்கூறி   மூங்கா அரிது-மூங்கா இல்லை
என்பவற்றை   எடுத்துக்காட்டுவர்   உரையாளர்.  இவை விட்டிசைத்தலின்
புணர்மொழியாகாமை யறிக.
 

புளியங்கோடு,எருவங்குழி,நனியுயர்ந்தான்,சாலவழகிது என இடைச்சொல்,
உரிச்சொற்களின்கண் வந்தன. பிறவும் இவ்வாறே கண்டு கொள்க.