சூ. 142 :

அவைதாம்

முன்னப் பொருள் புணர்ச்சி வாயில்

இன்ன என்னும் எழுத்துக்கட னிலவே

(40)
 
க-து:

மேற்கூறிய இசையிற்றிரியும் புணர்மொழிகள்  எழுத்தோரன்னவாய்
வரினும்  அவை ஒருபொருளை  வரைந்துணர்த்தற்குக்  காரணம்
கூறுகின்றது.
 

பொருள்:  மேலைச்  சூத்திரத்து    இசையாற்றிரியும்     எனப்பட்ட
புணர்மொழிகள்தாம்    இடமுதலாய    சார்புபற்றிக்   குறிப்பாற் பொருள்
உறுதிசெய்துணர்த்துவனவாம்.   அவ்வாறன்றிப்   புணர்நிலையிடத்து இஃது
இப்பொருளை  இதனாற் சுட்டுகின்றது என்பதற்குரிய எழுத்து முறைமையை
உடையன இல்லை.
 

அஃதாவது;   கூறுவோனது    குறிப்பான்   அவ்வப்பொருள் கொள்ள
நிற்பதல்லது   நிலைமொழி    வருமொழிகளில் உள்ள எழுத்துக்களாலன்று
என்றவாறு.
 

யானைக்  கோடு    கூரிது   என்றவழி,  எவ்வெவற்றிற்கு?   என்னும்
ஆராய்ச்சிக்கண்    யானைக்கு   என்றும்,   இவற்றுள் எதனது? என்னும்,
ஆராய்ச்சிக்கண் யானையது என்றும், யானையிடத்து  ஏதுகூரிது?  என்னும்,
ஆராய்ச்சிக்கண் யானையின்கண் என்றும்,  பொருள்முடிந்து   வருமாகலின்
அவ்ஆய்வின் நோக்கு முன்னப்பொருளாகுமென அறிக.
 

இனி    எழுத்தாற்பொருள்    வேறுபடுதலாவது,   அவன்  கண்டான்
-அவற்கண்டான்;  அவர்   கண்டார் - அவர்க்கண்டார்  என  ஓரெழுத்து
வேறுபடுதலான் வினைமுதற்பொருளும் செயப்படுபொருளுமாகத் திரிதலாம்.
பிறவும் அன்ன.
 

இனி, உரையாசிரியன்மார் இவ்இரண்டனுள் முதல் நூற்பாவிற்கு எழுத்து
ஒருதன்மையான    புணர்மொழிகள்    ஓசை   வேற்றுமையான் புணர்ச்சி
வேறுபடுதல்     நிலைபெற்ற     பண்பாகும்     என       உரைகூறிச்
செம்பொன்பதின்றொடி  என்னும்    புணர்மொழிகள்     முறையே செம்பு
ஒன்பதின்தொடி-செம்பொன் பதின்தொடி என இசையிற்றிரிந்தன   என்றும்,
இச்சூத்திரம்  ஒலிவடிவத்திரிபு    பற்றியதென்றும், இரண்டாம் நூற்பாவிற்கு
மேற்கூறியாங்குவரும்            புணர்மொழிகள்     முன்னத்தான்வரும்
பொருண்மையுடையவை புணர்ச்சியிடத்து   இத்தன்மையவென்னும் எழுத்து
முறைமையுடையனவல்ல என்றும்   இச்சூத்திரம் வரிவடிவிற்குரிய தென்றும்
கூறிச்சென்றனர். அவர்கூறியபொருள்  இடைக்காலத்து அணிநூலார் வகுத்த
பிரிமொழிச் சிலேடையின்  பாற்பட்டு இரட்டுறமொழிதலாய் அடங்குவதன்றி
எழுத்துப்புணர்ச்சி கூறும் எழுத்திலக்கணத்தின் பாற்படுவதாகாது.
 

மற்றுக்,   கண் + நீர் = கண்ணீர்;   கள் + நீர்  =  கண்ணீர் என்னும்
புணர்மொழிகள் புணர்ந்து நின்றவழி வடிவான்   ஒத்து   நின்றனவாயினும்
பிரிந்த  வழி  எழுத்தான்  வேறுபடுதல்  கண் கூடாம்.  அவ்வாறே செம்பு
ஒன்பதின்தொடி-செம்பொன்  பதின்தொடி  என  நிலைமொழி  வருமொழி
வேறுபட்டு  நின்று  புணர்ந்தனவற்றைக்  காட்டி  இசையாற்றிரிந்தன எனல்
‘‘எழுத்தோரன்ன’’ பொருள்தெரி புணர்ச்சி என்பதற்கு முரண்பட்டதாகும்.
 

இங்ஙனம்    உரையாசிரியன்மார்   கூறிய   ஒவ்வாவுரைகளுள் ஓராது
பலவற்றை  ஏற்று  நூல்   செய்த பவணந்தியாரும் அங்ஙனம் கொள்ளுதல்
எழுத்திலக்கணம்  ஆகாமை கருதிப் பொதுவியலுள் மரபுநிலை கூறுமிடத்து
வைத்து ‘‘எழுத்தியல்   திரியாப்  பொருள்திரி   புணர்மொழி  இசைத்திரி
பாற்றெளி     வெய்து    மென்ப’’   என்றார்.   இப்போலி  உரைகளான்
புணர்மொழிக்கண்    நிகழும்   இன்றியமையாத இவ்இலக்கண  நுட்பங்கள்
மறைந்தமையை மாணாக்கர் ஓர்ந்து தெளிக.