5. தொகை மரபு
 

தொகைமரபுதொகுப்பாகக் கூறும்   மரபு  என்பது இதன் பொருள்.
ஈண்டுத் தொகுப்பாகக் கூறப்பெறும் புணர்ச்சி இலக்கணங்களைப்    பற்றிய
இயலை   உணர்த்தி    நிற்றலின்,  அன்மொழித்தொகையாம். தொகுத்துக்
கூறப்பெறும்    புணர்ச்சி  இலக்கணங்களேயன்றி   அவற்றிற்குரிய    சில
கருவிகளும், மரூஉ  முடிபுகளும்   பிறவும்   கூறுதலின்  இயல் என்னாது,
மரபென்றார்.
 

இதன்பின் உயிர்மயங்கியல் முதலாய மூன்று இயல்களுள்ளும்  உயிரீறும்
புள்ளியீறும்    குற்றியலுகர    ஈறும்   நிற்ப அவற்றொடு நாற்கணங்களும்
இருவழியானும் புணருங்கால் எய்தும் விதிகள் கூறப்  பெறுகின்றன. ஆண்டு
நிறுத்தசொல்லின் உயிரீறும் புள்ளியீறும் ஒருங்கெய்தும் விதிகளைக் கூறற்கு
ஏலாவாகலான் அவற்றைப்  பற்றியும், இருவகை ஈறுகளும் புணருங்கால் சில
ஒத்தவிதிகளைப் பெறுதலின் அவற்றைப் பற்றியும்,ஒரு சில ஈறுகளையுடைய
சொற்கள்    நிறுத்தசொல்லாகத்     தோன்றாமை   பற்றியும் சில ஈறுகள்
வேற்றுமைப் புணர்ச்சியுள் மாறுபட்டும் அல்வழிப்புணர்ச்சியுள் ஒன்றுபட்டும்
வருதலின்     அவற்றைப்   பற்றியும், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்
பொதுவிதிக்கு மாறுபட்டு நிகழும் ஒருசார்  வேற்றுமைப்புணர்ச்சி  பற்றியும்,
அளவுப்பெயர்களின் முதல்   எழுத்துக்கள் பற்றியும், மரூஉ முடிபு பற்றியும்
நிகழும் மரபுகளையெல்லாம் தொகுத்துக் கூறலின் இவ்வியல்‘‘தொகை மரபு’’
என்னும் பெயருடையதாயிற்று.
 

இனி இவ்வியலுள், ‘‘வல்லெழுத்து மிகுதல் சொல்லிய முறையான்’’(சூ-14)
‘‘வேற்றுமை யல்வழி’’ (சூ-16) ‘‘சொல்லிய மருங்கின்’’  (சூ-17)  ‘‘உகரமொடு
புணரும் புள்ளி யிறுதி’’ (சூ-21) ‘‘உளவெனப்   பட்ட  எல்லாச் சொல்லும்’’
(சூ-22) ‘‘உளவெனப்பட்ட ஒன்பதிற்   றெழுத்தே’’   (சூ-28)      என்றாற்
போலவரும் சூத்திரங்கள்   முற்கூறியவற்றை   நினைவுபடுத்தும் முறையில்
அமைந்துள்ளமையான், இஃது  இறுதி இயலாக அமைந்திருத்தல் வேண்டும்.
சொல்லதிகாரத்துள்   நால்வகைச்     சொற்களின்     இயல்பு கூறியபின்
எச்சவியலும்,   பொருளதிகாரத்துள்   களவியல்,   கற்பியல்களின்    பின்
பொருளியலும் அமைந்துள்ளமை இதற்குச் சான்றாகும்.
 

மேலும்  சாரியைகள்    இடைச்சொற்களாதலின், அவற்றின்   புணர்ச்சி
இயல்புகளைப்  புணரியலுள்  கூறியுள்ளமையான்,  வேற்றுமை  உருபுகளும்
இடைச்சொல்லாகலின்       உருபியல்   அதனையடுத்து     அமைதலே
முறைமையாகும்.  எனினும்  உரையாசிரியன்மார்  இதனை  ஐந்தாவதாகவே
வைத்து உரை   கூறியுள்ளமையான்,  அம்முறைமையை  மாற்றாமல் ஈண்டு
மேற்கொள்ளப்பட்டதென்க.
 

சூ. 143 :

கசதப முதலிய மொழிமேற் றோன்றும்

மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான்

ஙஞநம என்னும் ஒற்றா கும்மே

அன்ன மரபின் மொழிவயி னான

(1)
 
க-து:

உயிர்    மயங்கியல்    புள்ளி  மயங்கியல்களுள்  (சூ. 28, 301,
315) மெல்லெழுத்துமிகும் எனப் பொதுப்படக் கூறியதனை ஈண்டு
நியமிக்கின்றது.
 

பொருள்:  உயிரீறும்     புள்ளியீறும்      நிற்பக்     குறித்துவரும்
கசதபக்களை    முதலாக    உடைய மொழிகளின் மேல், தோன்றும் எனப்
பொதுவாகக்  கூறப்பெற்ற  மெல்லெழுத்திலக்கணமாவது, அத்தகைய வரன்
முறையினை  உடைய     மொழிகளின்   கண்ணே   ஈண்டுச்  சொல்லிய
முறைமையான் நிரலே ஙஞநம என்னும் ஒற்றாகமிகும்.
 

எ-டு:   விளங்கோடு, விளஞ்செதிள், விளந்தோல், விளம்பூ    எனவும்
வெரிங்குறை, வெரிஞ்செய்கை,வெரிந்தலை, வெரிம்புறம் எனவும் மரங்குறிது,
மரஞ்சிறிது, மரந்தீது, மரம்பெரிது எனவும்   வரும்.   இவை அன்னமரபின்
மொழிகள்.
  

விளக்குறுமை, விளக்குறைத்தான், மரக்கிளை,  மரச்சிறுமை,  மரத்துணி,
மரப்பட்டை   என்றாற்  போல்வன  அன்னமரபின்  மொழிகளன்மையான்
மெல்லெழுத்துப்  பெறாவாயின. பிறவும் இவ்வாறே அறிந்து கொள்க.