சூ. 15 :மெய்யின் இயற்கை புள்ளியொடு(ம்) நிலையல் 

(15)
 

க-து:

மெய்யெழுத்துக்களின் இயல்பாமாறு கூறுகின்றது. (புள்ளியென்பது,
ஒலியணுக்களைக்குறிக்குமொருபெயர்.    அது    வரிவடிவிற்கும்
பொருந்த அமைந்தது)
  

பொருள்: பிறப்பியலுட்   கூறப்பெறும்    முறைமையான்    உருவாகி வடிவுபெறும்     மெய்யெழுத்துக்களின்       தன்மையாவது      அவை ஒலிப்புடையனவாயும் நிற்கும்.
 

புணர்ச்சி விகாரத்தாற்  குன்றிய  ‘‘புள்ளியொடும்’’  என்ற  உம்மையாற் புள்ளியொடுநில்லாமல் உயிரொடு  இயைந்து  உயிர் மெய்யாயும் நிற்கும்
என்று கொள்க. (உயிர்மெய்=உயிர்க்கும்மெய்)
  

உயிரெழுத்துக்களை   வகுத்து   அவற்றின்   அளவு   கூறிய    வழி ஓரளபிசைக்கும் ஈரளபிசைக்கும் என அவை இசைக்கும் தன்மையை  உடன்
ஓதினார். ஒலிப்பின்றி உருவாகும் மெய்யெழுத்தினை  அங்ஙனங்  கூறாமல் ‘‘மெய்” ஒலித்தற்குரியது என்பதுதோன்ற ‘‘மெய்யின்  அளபே  அரையென மொழிப’’ என்று தோற்றுவாய்  செய்து  இச்சூத்திரத்தான் அதன் ஒலிக்கும் இயல்பினைச்சுட்டி, “மெய்யின்  இயற்கை புள்ளியொடும் நிலையல்” என்றார் அஃது  உயிர்ப்புற்று  இசைக்கும் இயல்பினைப் பதினேழாஞ்  சூத்திரத்தாற் கூறுவார்.
 

இனி ‘‘மெய்யே அரையள புற்றொலிக் கும்மே’’ என்றாற்   போலஅதன்
அளவையும்    ஒலிக்குமியல்பையும்        உடன்        கூறாமைக்குக்
காரணம்,     அஃது      ஒலிப்பின்றி       உருவாதலும்,     உயிர்ப்பு
உந்த   அரைமாத்திரையளவு  ஒலித்தலும்,  உயிரியைய  இசைத்தலுமாகிய
மூன்று நிலைமைகளை உடையதாகலின்  என்க.  அன்றியும்  இவ்வாசிரியர்
மெய்யெழுத்திற்குக்கூறும் இலக்கணங்களைச் சார்பெழுத்திற்கும் ஏற்றிக்கூறும்
மரபினை மேற்கொண்டாராதலின் ‘‘மெய்யே அரையள புற்றொலிக் கும்மே’’
என்றாற்போலக்கூறின்,       இதன்பின்னர்           மாட்டெறியப்படும்
சார்பெழுத்துக்கட்கும் அவ்விதி முழுதும்  எய்தும், எய்தின் ஆய்த எழுத்து
யாண்டும்   புள்ளியாகவே  (ஒலிப்புற்றே)   வருதலின்   ஆய்தம்   என்ற
முப்பாற்புள்ளி  என  முன்பு  விதந்துகூறப் பட்டமையான்,  மீண்டுங்கூறின்
அது     கூறியது     கூறலாய்      முடியுமாதலானும்,    குற்றியலிகரம்
உயிரைமேவுதலின்மையின் மாறுகொளக் கூறலாய் முடியுமாதலானும் என்க.
 

ஒப்பக்கூறல் என்னும்  உத்தியான் அகரம்  ஊர்ந்த உயிர்  மெய்க்கும்,
அரையளவு  ஒலிக்கும்  மெய்க்கும்  வேறுபாடு தோன்றப்   புள்ளி (கீற்று)
அடையாளம் வரிவடிவின்கண் எழுதிக் கொள்ளப்பெறும்.