சூ. 150 :

ணளவென் புள்ளிமுன் டணஎனத் தோன்றும்

(8)
 
க-து:

ணகர ளகரங்களில் முன் தகர நகரங்களின் திரிபு கூறுகின்றது.
 

பொருள்:  ணள  என்று சொல்லப்பெறும்  புள்ளிகளின் முன் தகரமும்
நகரமும்   என்னும்   உயிர்மெய்வரின் அவை  திரிந்து முறையே டகரமும்
ணகரமுமாகத் தோன்றும். தகரநகரம் என்பது அதிகாரத்தான் வந்தது.
 

எ-டு:  மண் + தீது = மண்டீது;  மண் + நன்று = மண்ணன்று  எனவும்
முள் + தீது = முஃடீது;    புள் + தேம்ப = புட்டேம்ப;    முள் + நன்று =
முண்ணன்று  என அல்வழிக்கண்ணும் மண்டீமை, மண்ணன்மை; முட்டீமை,
முண்ணன்மை என வேற்றுமைக்கண்ணும் வரும்.