சூ. 155 :

அஃறிணை விரவுப்பெயர் இயல்புமா ருளவே

(13)
 
க-து:

ஒருசார் விரவுப் பெயர்களின் தன்மை கூறுகின்றது.
 

பொருள்:  அஃறிணைப்பொருள்     கருதிவரும்    விரவுப்பெயர்கள்
இயல்பாதலும்    உளவாம்.   உம்மையான்  திரிந்து வருதலும் உளவெனக்
கொள்க.
 

ஒவ்வொரு   திணையுள்ளும்  பால்பற்றியும்  எண்ணுப்பற்றியும் விரவுப்
பெயர்கள்  உளவாதலின்  அஃறிணைப்பொருட்டாய் வரும் விரவுப்  பெயர்
என்பது விளங்க “அஃறிணை விரவுப் பெயர்’’ என்றார். இனிச்    சாத்தன்,
சாத்தி, கோதை; தாய், தந்தை; மகன்,  மகள்  என  இயற்பெயர்   முதலாக
முறைப்பெயரீறாக வரும் விரவுப் பெயர்களுள்  அகத்தோத்தினுள்  விதந்து
கூறப்பெற்றவை ஒழிந்த ஏனையவற்றை ஈண்டுக் கொள்க.
 

எ-டு:  சாத்தன், சாத்தி, தந்தை என நிறுத்தி; கண்டது,சென்றது, தக்கது,
பார்த்தது     என   அல்வழிக்கண்ணும்  கை,  செவி,  தலை,  புறம் என
வேற்றுமைக்கண்ணும் இயல்பாதல் கண்டுகொள்க. உம்மையான்  சாத்திப்புல்,
கொற்றிக்கோடு என வேற்றுமைக்கண் மிக்குவருதல் கொள்க.
 

உயர்திணைப் பெயர்கள் மேல் விதந்து கூறப்பெற்றமையான்   சாத்தன்,
குறியன், சிறியன் என நச்சினார்க்கினியர் காட்டும் உதாரணமும் விளக்கமும்
பொருந்தாமையறிக.