சூ. 158 :

வேற்றுமை யல்வழி இஐ என்னும்

ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய

அவைதாம்,

இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும்

உறழ்பா குநவும் என்மனார் புலவர்

(16)
 
க-து:

இகர ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்களின் அல்வழிப் புணர்ச்சி
கூறுகின்றது.   இகர   ஈற்று   உயர்திணைப்  பெயர் மேற்கூறப்
பெற்றமையான்   இச்சூத்திரம்    அஃறிணைப்  பெயர் பற்றியது
என்பது பெறப்படும்.
 

பொருள்:  வேற்றுமைவழியல்லாத அல்வழிப்புணர்ச்சிக்கண் இகர ஐகார
ஈற்றுப்   பெயர்கள்,   மூவகை முடிபு நிலைமையை உடைய. அவையாவன
வல்லெழுத்துவரின்   இயல்பாவனவும்   மிகுவனவும்  உறழ்வனவும் என்று
கூறுவர் புலவர்.
 

எ-டு:  பருத்தி  குறிது,  சிறிது,  தீது,  பெரிது  எனவும் ஆரை குறிது,
சிறிது,  தீது,  பெரிது  எனவும்  வரும்.  இவை  இயல்பு.  புலிக்கொற்றன்,
தாமரைக்கண்ணி என வரும். இவை மிகுதி.
 

எழுவாய்த்தொடர்கள்   பெரும்பான்மையும்  இயல்பாயும்  சிறுபான்மை
உறழ்ந்தும் வரும். உவமத்தொகை,இருபெயரொட்டுப் பண்புத்தொகை இவை
பெரும்பான்மையும் மிக்குவரும்.
 

இடைச்சொல்லும்    உரிச்சொல்லும்   பெயர்   வினைகளைச்  சார்ந்து
பெயராயும்   வினையாயும்  நிற்குமாகலானும்,அவை   தம்மை   உணர்த்தி
நின்றவழிப்    பெயர்ப்பொருட்டாம்   ஆகலானும்  இவ்விதி அவற்றிற்கும்
ஒக்கும்.
 

எ-டு:  தில்லைச்சொல்,    மன்னைச்சொல்  எனவரும்.  இவை இடைச்
சொற்கள், மிக்குவந்தன. சென்மதிபாக -இவ்இடைச்சொல் இயல்பாக நின்றது.
கடிகா - உரிச்சொல். இயல்பாக நின்றது.பணைத்தோள் - உரிச்சொல் மிக்கு
நின்றது. பிறவும் இவ்வாறே மரபு நோக்கி அறிந்து கொள்க.