சூ. 161 :

ஆறன் உருபினும் நான்க னுருபினும்

கூறிய குற்றொற் றிரட்ட லில்லை

ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்

நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான

(19)
 
க-து:

நெடுமுதல் குறுகும்  மொழிகட்கு  எய்தியது  ஒருமருங்கு விலக்கி
எய்தாதது எய்துவிக்கின்றது.
 

பொருள்:  நெட்டெழுத்தாகிய முதல் எழுத்துக்குறுகி வரும் எனப்பட்ட
மொழிகளின் முன்னர் வந்த ஆறாவதன் உருபின் கண்ணும்,  நான்காவதன்
உருபின் கண்ணும், மேல் இரட்டுமெனக் கூறிய  குற்றொற்று    இரட்டுதல்
இல்லை. மற்று,  அந்நிலைமொழி   யீற்றின்கண்நிற்கும்  ஒற்று  ஓர்  அகர
எழுத்தைப் பெற்று நிற்கும்.
 

எ-டு:  எனது, நினது,   தனது,  எமது,  நமது, தமது எனவும் எனக்கு,
நினக்கு,  தனக்கு,  எமக்கு,  நமக்கு,  தமக்கு  எனவும் வரும்.  தாம், நாம்
என்னும்   பெயர்களே   புணர்மொழிக்கண்   தம்,  நம்  எனச்  சாரியை
இடைச்சொல்லாகி    வருதலின்    அவற்றிற்கும்    இவ்விதி    ஒக்கும்.
எ-டு: எல்லார் தமதும், எல்லார் தமக்கும்; எல்லா நமதும், எல்லா நமக்கும்
எனவரும்.