சூ. 204 :

வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் 

எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும் 

ஆங்க என்னும் உரையசைக் கிளவியும் 

ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே

(2)
 

க-து

அகர ஈற்றுள்  ஒருசார்   வினைச்சொல்லும்   இடைச்சொல்லும்
வன்கணத்தொடு   புணருமாறு   கூறுகின்றது.  இடைச்சொற்கள்
தத்தம் பொருளவாயும், பெயர்வினைகளைச் சார்ந்தும்   பெயரும்
தொழிலுமாக ஆக்கமுற்று   நின்று புணரும் என்பது இதனானும்
பெறப்படும்.
  

பொருள் : அகர  ஈற்று   வினையெச்சச் சொல்லும், அகர ஈற்று உவம
உருபிடைச்  சொல்லும்,  என  என்னும்   சொல்லும்,  அகரச்  சுட்டாகிய
இறுதியும், ஆங்க என்னும்  உரையசைக்  கிளவியும்  நின்று  புணருங்கால்
கசதபக்கள் வரின் மிகும்.
 

எ- டு:  உணக்கொண்டான்,    சென்றான்,   தந்தான்,   போயினான்
எனவும்,    தவக்கொண்டான்,   தவப்பெரியன்    எனவும்   புலிபோலப்
பாய்ந்தான் எனவும் சொல்லெனச்  சொன்னான்   எனவும்   அக்கொற்றன்
எனவும்    ஆங்கக்     கொண்டான்   எனவும்   வரும்.   பொருந்தும்
சொற்கொணர்ந்து   ஏனைய   எழுத்துக்களொடும்  ஒட்டிக்கண்டு கொள்க.
‘‘சுட்டின் இறுதி’’ என்பதன்கண் ‘‘இன்’’ உயிர்வழி வந்த சாரியையாம்.