சூ. 210 :

அன்ன என்னும் உவமக் கிளவியும் 

அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் 

செய்ம்மன என்னும் தொழிலிறு சொல்லும் 

ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் 

செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் 

செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் 

அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் 

பலவற் றிறுதிப் பெயர்க்கொடை உளப்பட 

அன்றி யனைத்தும் இயல்பென மொழிப 

(8)
 

க-து:

அகர  ஈற்றுள்   ஒருசார்   சொற்களுக்கு   மேல்   எய்தியது
விலக்குகின்றது.
 

பொருள்: அன்ன   என்னும்    உவம     உருபிடைச்   சொல்லும்,
அண்மையிடத்தைச் சுட்டி நிற்கும் விளியேற்ற  அகர   ஈற்றுச்  சொல்லும்,
செய்ம்மன என்னும் வாய்பாட்டான் வரும் வினை முற்றுச் சொல்லும், ஏவற்
பொருளைக்கருதி முன்னிலைக்கண் வரும்  வியங்கோள் வினைச்சொல்லும்,
செய்த என்னும்   வாய்பாட்டான் வரும் பெயரெச்சச்  சொல்லும், செய்யிய
என்னும் வாய்பாட்டான்  வரும் வினையெச்சச் சொல்லும், அம்ம  என்னும்
உரையசைப்    பொருட்டாய்     வரும்    சொல்லும்,    அகர    ஈற்று
அஃறிணைப்பன்மைப்    பெயர்ச்சொல்லும்    உட்பட   அவ்அனைத்துச்
சொற்களும்   கசதபக்கள்   வரின்    இயல்பாகப்   புணரும்.  கசதபக்கள்
என்பது அதிகாரத்தான் வந்தது.
 

எ. டு:  பொன்னன்ன  குதிரை, செந்நாய்,  தகர்,  புல்வாய்  எனவும்;
ஊர  கேள்,  செல், தா,  போ   எனவும்;  உண்மன  குதிரை,  செந்நாய்,
தகர்,  புல்வாய்   எனவும்,  ‘அன்றி  யனைத்தும்’  என்றதனான்  ஏனைய
அகரஈற்று முற்றுக்களின் முன் உண்டன குதிரை, கரியன  குதிரை எனவும்,
உண்க கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும், உண்ட குதிரை,  செந்நாய்,
தகர், புல்வாய் எனவும் “எதிர்மறுத்து மொழியினும்  பொருள்நிலை திரியா”
(சொல்-236) என்பதனான் எதிர் மறைப்  பெயரெச்சத்தின்  முன் உண்ணாத
குதிரை, வாராத செந்நாய் எனவும்,  குறிப்புப்  பெயரெச்சத்தின் முன் கரிய
குதிரை, பெரிய செந்நாய்  எனவும்,   அம்மகொற்றா, சாத்தா, தேவா, பூதா
எனவும், பலகுதிரை,  செந்நாய்,  தகர், புல்வாய் எனவும் வரும். பல்ல, சில,
உள்ள,  பிற என்னும்  பன்மைப் பெயரொடும், உண்டன கண்டார், கரியன
செல்லும்  எனத்   தொழில்நிலைஒட்டும்   (வினையாலணையும் பெயர்கள்)
பெயர்களொடும் இவ்வாறே ஒட்டி வன்கணம் இயல்பாதல் கண்டு கொள்க.
 

வினைபோல     நிகழ்தலின்றிப்        பொருட்குக்     குறியீடாகக்
கொடுக்கப்படுதலின் பெயரைப்   ‘பெயர்க்கொடை’   என்றல்   பண்டைய
வழக்கென்க.