சூ. 234 : | குறியதன் இறுதிச் சினைகெட உகரம் |
| அறிய வருதல் செய்யுளுள் உரித்தே |
(32) |
க-து: | ஆகார ஈற்றுச் சொல் சிலவற்றிற்குச் செய்யுள் வழக்குப் பற்றியதொரு விதி கூறுகின்றது. |
பொருள்: குற்றெழுத்தினை அடுத்துநிற்கும் ஆகார ஈற்றுச் சொல்லிறுதியின் நிற்கும் ஆகாரம், ஒரு கூறுகெட்டு நிற்க, ஆண்டோர் உகரம் பொருள் விளங்க வருதல் செய்யுள் வழக்கிடத்து உரியதாகும். சினை-கிளை. கிளை என்பது ஒரு பொருளின் கூறாகலின் ஈண்டு எழுத்தினது கூறு ‘சினை’ எனப்பட்டது. |
‘முதலும் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே’ (வேற்-மய-6) என்றதனான் ஒன்றற்குச் சினையாவதே பிறிதொன்றற்கு முதலாக வருமாதலின் மொழிக்கு உறுப்பாகி நிற்கும் எழுத்து, அச்சொல்லுக்குச் சினையாதலும் அவ்எழுத்தின் மாத்திரை அளவும் ஒலிக்கூறுகளும் எழுத்திற்குச் சினையாதலும் பெறப்படும். ‘குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்கு’ (மொழி-1) என்னுமிடத்து மியா, என்னும் சொல்லின் உறுப்பாக நிற்கும் யகர ஆகாரமாகிய உயிர்மெய்யெழுத்துச் சினை எனப்பட்டது. ‘சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதி’ (தொகை-17) ‘சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்’ (குற்-புண-22) என்னுமிடங்களில் சுட்டெழுத்தின் மாத்திரையளவு சினையெனப்பட்டது. ‘நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு ஈறுசினை ஒழியா இனஒற்று மிகுமே’ (குற்-புண-67) என்னுமிடத்து றகர மெய்யினை ஊர்ந்து நின்ற குற்றியலுகரம் சினை எனப்பட்டது. இவ்வாறே, மொழியிடையிலும் இறுதியிலும் ஐகார எழுத்தின் போலியாக வரும் ‘அய்’ என்பதும் மொழியினது உறுப்பாக வருதலின் ‘ஐயென் நெடுஞ்சினை’ எனப்பட்டது. இங்ஙனம் ஒலியும் இசையுமாகிய வற்றான் ஆக்கம் பெற்றுள்ள மொழியினது மெய்ம்மையை ஓர்ந்து தொல்லாசிரியன்மார் அந்நுட்பம் விளங்கப் புணர்மொழி இலக்கணங்களை அமைத்து ஓதியுள்ள அறிவியல் திறத்தை அறிந்து கொள்க. |
அம்மரபானே குற்றெழுத்தின் இறுதி நின்ற ஆகாரத்தின் மாத்திரையுள் ஒரு கூற்றினை ஈண்டுச் சினை என்று உணர்த்தினார் என அறிக. |
எ. டு:‘‘இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல், சுறவுக் கோட்டன்ன முள்ளிலைத்தாழை’’ எனவும் ‘‘புறவுப் புறத்தன்ன புன்காய் உகாய்’’ எனவும் வரும். |
செய்யுள் வழக்கு உலகவழக்கு என்பவை யாப்பமைதியும் அஃதின்மையும் கருதி வகுத்துக் கொள்ளப்பட்டவையன்றி ஒன்று ஒன்றனுள் விரவாதென்பது கருத்தன்று என்பது மேலே விளக்கப் பட்டது. அதனான் நிலவுக்கதிர், கனவுக்காட்சி, முழவுத்தோள், அரவுப் பகை என வழக்கிடத்தும் வருமெனக் கொள்க. |
வருமொழி வரையாது கூறினமையான் இயல்புகணத்தும் இறவுஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, உயர்ச்சி, எழுச்சி எனவரும். |
இவ்உகரம் எழுத்துப்பேறாகிய சாரியையாதலின் உயிர் முதன் மொழிவந்து புணருங்கால் தான் ஊர்ந்து நின்ற உடம்படுமெய்யை நிறுத்தித்தான் நீங்கிவிடும். நின்ற உடம்படுமெய்யின் மேல் வரும் உயிர் ஏறிப் புறவெழுச்சி, சுறவாட்சி, முழவுயர், திணிதோள் எனப்புணர்ந்து நிற்கும். |
இது நிலைமொழிச் செய்கைக்குரிய விதியாதலின் இறுதி நெடில் குறுகி உகரம் பெற்று நின்ற வழி அவ்வுகரம் விதியீறாக நிற்றலின் அல்வழிக்கண் உகர ஈற்றிற்குரிய புணர்ச்சிவிதிபெற்று உயிர்க்கணமல்லாத ஏனைமூன்று கணங்களொடும் புணரும். |
எ.டு: கனவு கூடிற்று, நீண்டது, வலிது எனவரும். உயிர்வரின் சாரியை உகரம் நீங்கிக் கனவழகிது எனவரும். |
இச்சொல்லியல்பும் மொழியாக்கமரபும் கருதாத உரை யாசிரியன்மார் மிகைப்படுத்துக்கூறும் கருத்துக்கள் யாவும் ஆசிரியர் கருத்திற்கும் அறிவியலுக்கும் ஒவ்வாமை புலனாகும். |