சூ. 240 :

உரிவரு காலை நாழிக் கிளவி 

இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே 

டகரம் ஒற்றும் ஆவ யினான 

(38)
 

க - து:

இதுவுமது.
 

பொருள : உரி என்னும் அளவைப் பெயர் வருமொழியாக வருமிடத்து
நாழி   என்னும்   சொல்லின்   இறுதி   இகரம்   தான்  ஊர்ந்து  நின்ற
மெய்யொடும்   கெடும்;    அவ்விடத்து   ஒருடகர    ஒற்றுத்   தோன்றி
நிற்கும். தோன்றிய  ஒற்றை   மெய்யாக்கிக்   கொண்டு   உகரம்   ஏறிப்
புணருமென்க.
 

எ. டு: நாழி  +  உரி = நாடுரி   எனவரும்    (நாட் + உரி = நாடுரி)
‘இறுதி இகரம்’  என்றதனான்   நாழியுரி   எனக்கெடாது   பொதுவிதியாற்
புணர்தலுமாம். இங்ஙனம் இயல்பாயும்   புணர்தலான் இதனை மரூஉவினுள்
அடக்காமல் விதி கூறினார் என்க.
 

இச்சூத்திரத்து உரையாசிரியன்மார்   மிகையான்  அமைக்கும் முடிபுகள்
பொதுவிதியான் அமையுமாகலின் அவை வேண்டா கூறலாமென அறிக.