சூ. 280 :

ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்

வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே 

(78)
 

க-து:

ஐகார     ஈற்று   அல்வழிப்   புணர்ச்சி     தொகைமரபினுட்
பெறப்படுதலின்,     ஈண்டு    வேற்றுமைப்   புணர்ச்சியாமாறு
கூறுகின்றது.
 

பொருள் :ஐகார  ஈற்றுப் பெயரிறுதிமுன் வல்லெழுத்து, வேற்றுமைப்
பொருட்புணர்ச்சியாயின் மிக்குப்புணரும்.
 

எ. டு:யானைக்கோடு,  செவி,  தலை,  புறம் எனவும் முல்லைக்கொடி,
பூ; தாமரைக்கொடி, பூ எனவும் வரும்.
 

இனி,   ஐகார   உருபொடு   புணர்ந்து   நிலைமொழியாக    நிற்கும்
சொற்களுக்கும்   இவ்விதி    பொருந்தும்.   என்னை?   உருபியலின்கண்
ஐம்முதலிய  ஆறு   உருபுகளும்  நிலைமொழியொடு  வந்து  புணருமாறு
கூறியதன்றித் தாம்  நிலைமொழியாக  நின்று வருமொழியொடு புணருமாறு
கூறினாரில்லை.   காரணம்   உருபுகள்   தனித்து    நிலைமொழியாதற்கு
ஏலாமையான்  என்க.  எனவே, பெயரொடுகூடி நிலைமொழியாக நின்றவழி
அவை அவ்வவ்வீறுகளாய் உயிர் மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள்ளும்
குற்றியலுகரப் புணரியலுள்ளும் கூறும் விதிகளையே  பெற்றுப்புணருமென்க.
ஆசிரியர்   ஏகாரம்  ஓகாரம்  முதலிய  இடைச்சொற்களுக்கு  ஈண்டுவிதி
கூறியதும் அக்கருத்தானே என உணர்க.
 

ஆதலின்  உருபுகளும்   உருபின்  பொருட்டாய்  வரும்  சொற்களும்
பெயர்களொடு  கூடி  நிலைமொழியாக நிற்குமிடத்து இரண்டாமுருபு ஐகார
ஈற்றினுள்ளும் ஒடுவும், குவ்வும், அதுவும் குற்றியலுகரமாக மாறி விடுதலின்
குற்றியலுகரப்     புணரியலுள்ளும்,    இன்னும்    ஆனும்    கண்ணும்
புள்ளிமயங்கியலுள்ளும் அடங்கும்.
 

இவற்றை  உரையாசிரியன்மார்  மிகையின்  கண்ணும் புறனடையுள்ளும்
அடக்கி  ஆசிரியர்க்குக்  குறை கற்பிப்பர். உருபுகள்  அவ்வவ்வீறுகளுள்
அடங்கிப்     புணரும்   என்பதனை  ஆசிரியர்  கூறுமாற்றானே நன்கு
தெளியலாம்.
 

‘‘மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும்’’

(மொழி-13)

‘‘முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ(து)

அப்பெயர் மருங்கின் நிலையிய லான’’

(மொழி-35)

மெய்யொ டியையினும் உயிரியல் திரியாது’’

(நூன்-10)
 

‘‘அகரமொ டுயிர்த்தலும்’’ (நூன்-17) என ஒடு உருபு உயிர்த்தொடர்க்
குற்றியலுகர மொழியாய் நின்று புணர்ந்தது.
 

‘‘அகமென் கிளவிக்குக் கை முன் வரினே’’

(புள்ளி-20)

‘‘இலமென் கிளவிக்குப் படுவரு காலை’’

(புள்ளி-21)

‘‘உரையசைக் கிளவிக் காவயின் வரூஉம்’’

(மொழி-1)

‘‘இருமொழிக் குரித்தே’’

(மொழி-42)
 

‘‘எகர   ஒகரம்   பெயர்க்கீ   றாகா   (உயிர்மய-70) எனக் குவ்வுருபு
வன்றொடர்க் குற்றியலுகரமாக நின்று புணர்ந்தது.
 

இதனது இதுவெனும் அன்ன கிளவியும் 

(வேற்-18)
 

நாளது  சின்மையும்  இளமைய தருமையும் (அகத்-42) என அது உருபு
உயிர்த்தொடர்க்  குற்றியலுகரமாக  நின்று  புணர்ந்தது.  ஏனை இன் ஆன்
கண் முதலியவற்றையும் இவ்வாறே ஆசிரியர் கூறியுள்ளமை கண்டு கொள்க.
அவ்வாற்றான்  ஐயுருபு - ‘புலியைக்  கொணர்ந்தான்,  கனியைத் தின்றான்,
நீரைப் பருகினான், யானையைப் பார்த்தான்’ எனவும் சாரியையொடும் கூடி
‘ஊரினைக்கண்டான்,  யாழினைப்  பெற்றான்,  கொடியினைப்  பார்த்தான்’
எனவும் வரும்.