சூ. 284 :

பனையின் முன்னர் அட்டுவரு காலை

நிலையின் றாகும் ஐயென் உயிரே

ஆகாரம் வருதல் ஆவயி னான 

(82)
 

க-து :

பனை  என்னும்  சொல்,  வருமொழி  அட்டு   என்பதனொடு
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :பனை  என்னும்  மரப்பெயர்ச்  சொல்லின்  முன்னர் அட்டு
என்பது வருமிடத்து, இறுதி ஐகாரம் நிலைபெறுதல் இன்றாகும்; அவ்விடத்து
ஓர் ஆகாரம் தோன்றி வருதலாகும்.
 

எ. டு:பனை + அட்டு (பன்+ஆ+அட்டு)  பனாஅட்டு எனவரும். ஐகாரம்
கெடும்   என்னாமல்   நிலையின்றாகும்  என்றதனான்  பனையட்டு எனப்
பொதுவிதி பெற்று வருதலும் கொள்க.
 

இனி ‘‘ஆவயினான’’ என்பதனான் ஓராநயம், விச்சாவாதி, கேட்டாமூலம்,
பாறாங்கல் என்னும் அல்வழி முடிபுங்கொள்க என்பார் நச்சினார்க்கினியர்.
 

இவற்றுள் ஓரா, விச்சா என்பவை இயல்பீறாகவே கொள்ளப்படுதலானும்,
கேட்டா மூலம் என்பது  சான்றோர் வழக்கன்றாதலானும் அவற்றை ஈண்டு
அடக்குதல்  வேண்டாவாம். பாறாங்கல், கூழாங்கல் என்பவை  பண்புபற்றி,
ஒருசொற்  புணர்ச்சியாய்   நிற்பவையாகலான்   அவற்றை   நிலைமொழி
வருமொழி செய்து புணர்த்தல் வேண்டாவாம்.