சூ. 288 :

செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்

ஐயென் இறுதி அவாமுன் வரினே

மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்

டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்

(86)
 

க-து :
 

வேட்கை   என்னும்  சொற்குச்  செய்யுள்  வழக்காகிய  முடிவு
கூறுகின்றது.
 

பொருள் :செய்யுள்       வழக்கின்கண்     வேட்கை     என்னும்
சொல்லிறுதியாகிய   ஐகாரம், அவா என்னும் சொல் வருமொழியாக வரின்
தான்  ஊர்ந்து   நின்ற  மெய்யொடும்  கெடும். ஆண்டு  நின்ற  டகாரம்
ணகாரமாகத் திரிதல் வேண்டும்.
 

எ. டு:வேட்கை+அவா = வேணவா. “வேணவா நலிய  வெய்ய உயிரா”
(நற் - 61)  எனவரும்.  வேட்கையான்  எழுந்த  அவா  என்பது பொருள்.
வேட்கையவா எனப் பொதுவிதியாற் புணரின் அல்வழியாம். வேட்கையாகிய
அவா   என்பது  பொருள்.  வேட்கை  என்பது  வேண்  எனத் திரிதற்கு
வருமொழி காரணமாகாமையின் செய்யுள் வழக்காயிற்றென உணர்க.