சூ. 29 :யரழ என்னும் புள்ளி முன்னர்
முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும்
(29)
 
க-து:யரழ என்னும் இடைஎழுத்துக்களின் முன்னர்க் கசதப ஞநம யவ,
ங என்பவை வந்து மயங்குமென்கின்றது.
 

பொருள்:யரழ என்னும் புள்ளி எழுத்துக்களின்  முன்னர் மொழிக்கண்
முதலாகி  வரும்  என்னும்  கதநபம  சவயஞ  என்னும்  ஒன்பது   உயிர்
மெய்யெழுத்தும், மொழிமுதலாகாமல் புணர்ச்சி இயல்பான் மிக்குவரும் ஙகர
ஒற்றும் தனித்தனியே வந்து அவற்றின் ஓசையொடு மயங்கும்.
 

இப்பத்தினுள் ஙகரம் ஒற்றெழுத்தாகவன்றி உயிர்மெய்யாக வாராமையின்
அதனைப்  பிரித்துக்   கூறினார்.  ஒடு   என்பது   எண்ணிடைச்  சொல்.
முதலாகெழுத்தொடு-ஙகரமொடு  எனத்  தனித்தனிக்  கூட்டுக.   ‘‘என்றும்
எனவும்  ஒடுவும்  தோன்றி  ஒன்றுவழி  யுடைய  எண்ணினுட்  பிரிந்தே’’
(இடையியல்-46) என்பதனாற் பிரிந்து கூடிற்றென்க.
 

எடுத்துக்காட்டு :
 

செய்கை

ஆர்கலிஆழ்கடல்

தூய்து

சார்தல்ஆழ்தல்

பாய்நர்

தேர்நர்வாழ்நர்

ஆய்பவர்

சேர்பவர்வீழ்பவர்

தூய்மை

நேர்மைதாழ்மை

*கொய்சிறை

*ஓர்சொல்*பாழ்சுரம்

*மெய்வழி

*நேர்வழி*ஊழ்வினை

*பாய்ஞெண்டு

*ஊர்ஞெண்டு*வாழ்ஞெண்டு

செய்யவள்

*போர்யானை*காழ்யானை

*வேய்ங்குழல்

*ஆர்ங்கோடு*பாழ்ங்கிணறு
 

வேய்ங்குழல் முதலிய மூன்றினும்  வந்த ஙகரம் புணர்ச்சி  விகாரத்தான்
வந்துள்ளமையைப் புள்ளி  மயங்கியல் 65, 68, 92  ஆகிய சூத்திரங்களான்
அறிக.     *இக்குறியிடப்    பெற்றவை    தொகைமொழிகள்.    ஏனைய
தனிமொழிகள்.   வேய்கடிது,   வேய்சிறிது,  வேர்சிறிது,  யாழ்கடிது எனப்
புணர்மொழியுள்ளும் கண்டு கொள்க.
  

இனி, யரழக்களின் முன்னர் ஙகரம் மயங்குதற்கு வேய்ஙனம்* வேர்ஙனம்
வீழ்ஙனம்  எனக்காட்டுவர். இது நன்னூலின்  தாக்கத்தானும் தொல்காப்பிய
நெறியை  நெகிழவிட்டமையானும்  நேர்ந்த  குறையாகும்.  ஙகரம்  மொழி
முதலாகா  என  ஆசிரியர்  தெளிவுறக் கூறியிருப்பவும்   அதனை  ஓராது
ஙனமெனக்காட்டுதல் பிழையாம் என்க.
  

அங்ஙனமாயின்,  அங்ஙனம்  இங்ஙனம்  உங்ஙனம்  எங்ஙனம்  எனச்
சுட்டினையும் எகரத்தையும் அடுத்து இச்சொல் வருதலின்  அவர்  கூறுவன
பிழையாமாறு என்னை எனின்? அங்ஙனம்  முதலிய  நான்கு  சொற்களும்
அங்கு,  இங்கு,  ஆங்கு,  ஈங்கு,  யாங்கு,  ஆண்டு,  ஈண்டு,  ஆண்டை,
ஈண்டை,  அன்றி,  இன்றி,  அதோளி,  இதோளி  என்பவற்றைப்  போல,
இடைச்சொற்களடியாகப்   பிறந்த      பிரிப்பப்பிரியா     ஒருமொழியாய
தனிச்சொல்லாகும்.   அவை      சுட்டெழுத்துக்களையும்    எகரத்தையும்
முதலாகக்கொண்டு இடமும் தன்மையுமாகிய பொருள்  குறித்து  வருமென்க.
ஆதலின் நிலைமொழி  வருமொழியாக  இவற்றைப்  பிரித்தல்  கூடாதென
அறிக.  இனி  ஆங்ஙனம்,   ஈங்ஙனம்   என   நெடிலுக்குப்   பின்வரும்
மெல்லொற்று இரட்டுதல் தமிழ்  இலக்கணத்திற்கு  ஒவ்வாது  என்பர்  சில
ஆய்வாளர்.   மெல்லெழுத்து   ஆறனுள்    ஙகரம்   ஒழிந்த    ஐந்தும்
மொழியிறுதியில்   வருவன.  அவற்றுள்  ஞந  ஒழிந்த,  மணன  மூன்றும்
நெடிலையும்  குறிலையும் அடுத்துத் தனிமொழியாக நின்று வருமொழியொடு
புணர்தற்குரியவை. ஙகரம் மொழியிறுதிக்கண்வாராது. அம்முறையான்  அது
வல்லெழுத்தை   ஒத்ததாக     உள்ளமையறியலாம்.  இரட்டுதல்  என்பது
ஈரெழுத்தொருமொழிக்கண்   குறிலைச்    சார்ந்து நிற்கும்  ஒற்று  உயிர்
முதன்மொழி வருங்கால் எய்தும் புணர்மொழிச் செய்கையாகும்.  அங்ஙனம்
ஆங்ஙனம் என்பவை இடைச் சொல்லடியாகப் பிறந்த தனிச் சொற்களாகும்.
அவை   நிலைமொழி    வருமொழியாக    அமைந்து   புணர்ந்த  புணர்
மொழிகளல்ல. வல்லொற்றை இடையே கொண்ட சொற்கள் குற்றம், கூற்றம்,
வட்டம்,  வாட்டம்,  பக்கம்,  பாக்கம்  என  வருமாறு போல  அங்ஙனம்,
ஆங்ஙனம் என  வந்தனவாதலின்  அவர்  கருத்து  நிரம்பாமையறியலாம்.
அதனானன்றே  ஆசிரியர்  சுட்டுவினாக்களை  முதலாகக்  கொண்டுவரும்
அவன், இவன், உவன்,  யாவன்  முதலியவற்றை  ஒருசொல்லாக வைத்துப்
பெயரியலுட் கூறுவராயினார் என்பது.
 

இவற்றைப் பிரித்தல் நன்னூல் வழிவந்த  பிழை  வழக்காகும்.  இதுபற்றி
ஆய்வறிஞர் வேங்கடராசுலு ரெட்டியார் அவர்களின் விபரீத விளக்கங்களும்
பிறவும் பொருந்தாமையை எனது மெய்ம்மயக்க ஆய்வுக்கட்டுரையுட் கண்டு
தெளிக.
 

இச்சூத்திரத்தான் யரழ என்னும் புள்ளி யெழுத்தின்முன்  கதநபமசவயஞ
என்னும் ஒன்பது உயிர்மெய்யெழுத்தும் ஙகரப்புள்ளி எழுத்தும் மொழிக்கண்
இணைந்துவரும் என்பதும் உணர்த்தப்பட்டது.