சூ. 309 :முரண்என் தொழிற்பெயர் முதலியல் நிலையும்(14)
 

க-து:

முரண் என்னும் தொழிற்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :பண்பை உணர்த்தாமல் தொழிலை உணர்த்தி வரும் முரண்
என்னும்  தொழிற்பெயர் பொதுவிதியாக  முன்னர்க் கூறிய இலக்கணத்தான்
நிலைபெறும்.   என்றது;  அல்வழிக்கண்   இயல்பாயும்   வேற்றுமைக்கண்
டகரமாகத் திரிந்தும் நிற்கும் என்றவாறு.
 

எ.டு :முரண்   கடிது,  சிறிது,   தீது,  பெரிது  என   அல்வழியிலும்
முரட்கடுமை,   சிறுமை,  தீமை,  பெருமை  என  வேற்றுமையிலும் வரும்.
தொழிற்பெயராயினும் இச்சொல் உகரம் பெறாது வரும் என்பது கருத்து.
 

முரண்  என்னும்   சொல்,  இருளும்  ஒளியும்  தம்முள்  முரணாகும்:
என்புழிப்பண்பாயும்  மன்னர்  தம்முள்  முரணிப் போரிட்டனர்: என்புழித்
தொழிலாயும்  நின்றவாறு  காண்க.  இதனைத்  ‘‘தொழிற்பெய  ரெல்லாம்’’
(சூ. 306) என்பதன்  பின்வையாது ஈண்டு வைத்தார். முரண் கடுமை எனத்
திரியாத  வழி  நிலைமொழி  பண்புப்பெயர்  எனவும்  முரட்கடுமை எனத்
திரிந்த வழி நிலைமொழி தொழிற் பெயரெனவும் தெரிந்துகோடற் கொள்க.