சூ. 311 :

அகர ஆகாரம் வரூஉங் காலை

ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே 

(16)
 

க-து:

அகர  ஆகாரம்  வருமிடத்து  ஒருசார்  வழக்குப்  பற்றிய விதி
கூறுகின்றது.
 

பொருள் : ஒருசார்   மகர   ஈற்றுச்   சொற்கள்  அகர ஆகாரங்கள்
வருமிடத்து  மகரம் கெட  அதன்மிசை விதியீறாக நின்ற அகரம் நீளுதலும்
உரித்தாகும்.  உம்மை   எதிர்மறையாகலின்  நீளாது   வருதலும்  ஆகும்
என்பதாம்.
 

எ.டு:மர  +  அடி  =  மராஅடி;  குள  +  ஆம்பல் = குளாஆம்பல்
எனவரும்.  அகரம்   நீடும்  என்ற  சிறப்பு   விதியான்   உடம்படுமெய்
பெறாவாயின. உம்மையான் மரவடி, குளவாம்பல் எனவும் வரும்.
 

உரையாசிரியன்மார்     அடுத்துவரும்     நூற்பாவின்கண்    உள்ள
‘‘வழக்கத்தான’’   என்பதனான்    குளாஅம்பல்   என     ஆகாரத்தை
அகரமாக்குக    என்பர்.   அங்ஙனம்    ஆக்கிக்   கோடற்குக் காரணம்
கூறினாரில்லை.  மற்று,  வருமொழி  முற்கூறியதனான்  கோணா கோணம்,
கோணாவட்டம் எனப் பிறவும் வேறுபட வருவனவற்றை எல்லாம்  கொள்க
என்பார்.  அவை  கோணத்துள்  கோணம்,  கோணத்துள்  வட்டம் எனப்
பொருள்  தந்து  நிற்றலின்  மரூஉ   முடிபாகக்   கொண்டு  புறனடையுள்
அடக்குதலே நேரிதென்க.