சூ. 32 : | ஆ ஏ ஓ அம் மூன்றும் வினாஅ |
(32) |
க-து: | உயிர் நெட்டெழுத்துள் மூன்றற்குச் சிறப்புக் குறியீடு கூறுகின்றது. |
பொருள்:ஆஏஓ என்னும் அம்மூன்று எழுத்துக்களும் வினா என வழங்கப்பெறும். இதுவும் ஆட்சிப்பொருட்டாய இலக்கணக் குறியீடேயாம். |
எ - டு :“மாறுகொள் எச்சமும் வினாவும்” (உயிர்மய-22) எனவும், “வன்புற வரூஉம் வினாவுடை வினைச்சொல்” (வினை-47) எனவும், மேல் ஆளுமாறு கண்டுகொள்க. |
இனி, யா என்னும் உயிர்மெய்எழுத்துப் பன்மை வினாப் பெயராயும் யாவன், யாவள், யாவர், யாது, யாவை என்னும் வினாப்பெயர்ச் சொற்களின் உறுப்பாயும் வருதலன்றித் தனித்து வினா இடைச்சொல்லாக வாராதென்க. |
‘யார்’ என்பது வினாவினைக் குறிப்புச்சொல். யாங்கு - யாண்டை என்பவை இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயர்கள். “யாவென் வினாவின் ஐயென் இறுதியும்” (உருபி-3) “யாவினா மொழியே” (குற்-23) என ஆசிரியர் விதந்தோதுமாறு கண்டு கொள்க. |
இவ் இரு சூத்திரங்கட்கும் உரையாசிரியன்மார் கூறும் உரையும் விளக்கமும் இந்நூல் நெறிக்கு ஏற்புடையன வாகாமை தெரியலாம். |