சூ. 333 :மன்னும் சின்னும் ஆனும் ஈனும்

பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்

அன்ன இயல என்மனார் புலவர்
(38)
     

க-து:

ஒருசார்  னகரஈற்று இடைச்சொற்கும் னகர ஈற்றுப் பெயர்க்கும்
வினையெச்சத்திற்கும் மேற்கூறிய விதியை எய்துவிக்கின்றது.
 

பொருள் :  மன்,  சின்,  ஆன்,   ஈன்,   பின்,    முன்    என்னும்
சொல்லீறுகளும்,  னகரஈற்று  வினைஎச்சச்   சொல்லிறுதியும்   மேற்கூறிய
இயல்பினவாய் வல்லெழுத்தியையின் றகரமாகும்.
 

இசின் என்பது  சின்  என  முதற்குறையாய்  நின்றது.  மன், சின் என
ஓதப்பட்டனவேனும் அவை பெயரொடும்  வினையொடும் நடைபெற்றியலும்
என்னும் இலக்கணத்திற்றிரியா என்க. மேல் வரும் இடைச்  சொற்களுக்கும்
இவ்விளக்கம் ஒக்கும். ஆன், ஈன் என்பவை சுட்டுப் பெயர்கள்; பின்,  முன்
என்பன இடப்பெயரும் காலப்பெயருமாம்.
 

எ - டு : அதுமற்  கொண்கன்றேரே - காப்பும்  பூண்டிசிற்  கடையும் போகலை   எனவும்,    ஆற்கொண்டான்,    ஈற்கொண்டான்    எனவும்,
பிற்கிடந்தான்,  முற்சென்றான் எனவும் தரிற்கொள்ளான், காணிற் பெறுவான் எனவும் வரும்.
 

பின், முன் என்பவை காலப் பொருளவாய் நிற்குங்கால் பின்கொள்வான்,
முன்கொண்டான்   என  இயல்பாதலைப்  புறனடையாற்  கொள்க.   ஊன்
என்னும் சுட்டுப் பெயர் திரியாமையான் விலக்கப்பட்டது.