சூ. 347 :

இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்

முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்

மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே

(52)
 

க-து:

உயர்திணைப்   பொருட்டாய்   வரும்   ஒருசார்  னகர ஈற்றுப்
பொதுப்பெயர்  தந்தை   என்னும்   சொல்லொடு   புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் : னகார   ஈற்று  ஒருசார்  இயற்பெயர் முன்னர்த்  தந்தை
என்னும் முறைப்பெயர் வரின்,  தந்தை  என்னும்  சொல்லின் முதல்நிற்கும்
உயிர்மெய்யுள்  மெய்கெட அதனை ஊர்ந்து  நின்ற  அகரம் நிலைபெறும்.
நிலைமொழி  இயற்பெயரின் இறுதி  அன்கெட அன்னினது அகரம் ஊர்ந்து
நின்றமெய் கெடாது நிற்கும்.
 

எ. டு:  சாத்தன்  +  தந்தை  =  சாத்தந்தை  எனவரும்.  தந்தை டி
அந்தை. சாத்தன் டி சாத்த். சாத்த் + அந்தை = சாத்தந்தை  என மயங்கும்.
கொற்றந்தை; ஆதந்தை; பூதந்தை என்பனவும் அன்ன.
 

சிறுகுறிப்பு :- தொண்ணூறு   -   தொள்ளாயிரம்   முதலிய  புணர்
மொழிகளைப்  போலச்   சாத்தந்தை  முதலியவற்றிற்கும்   கூறியுள்ளவிதி
தொல்லோர் மரபென்க. தந்தை என்னும் படர்க்கைச் சொல் ஆசிரியர் நூல்
செய்த காலத்து மூவிடத்திற்கும் உரிய பெயராக வழங்கி வரலாயிற்று எனத்
தெரிகின்றது.   தன்மைப்பெயர்   எந்தை,    முன்னிலைப்பெயர்   நுந்தை
என்பனவாகும்.  இவற்றுள் தம்,  நும்,  எம்  என்பவை இடத்தைக் குறித்து
நின்று  ‘தை’  என்னும்  முறைப்பெயரொடு  புணர்ந்து   ஒரு  சொல்லாய்
அமைந்துள்ளமை புலனாகும். ஏனைப் பெயர்களும் இவ்வாறே; யாய், ஞாய்,
தாய் எனவும் எங்கை, நுங்கை, தங்கை எனவும் எம்பின்,  நும்பின், தம்பின்
எனவும்   அமைந்துள்ளமை  காணலாம்.   எனவே,   சாத்தன்   முதலாய
பெயர்களின் முன்வந்து  புணர்ந்த  முறைப்பெயர்   ‘தை’   என்பதேயாம்.
அதனான்  சாத்தன்  -  தை, என்பவை  நிலைமொழி ஈறு, வருமொழியின்
கிளையொற்றாக மாறிச்  சாத்தந்தை எனப்  புணர்ந்து நிற்பதை அறியலாம்.
தொல்லோர்     வகுத்தமரபு    நோக்கி   ஆசிரியர்   ‘தை’   என்பதை
வருமொழியாகக்  கூறாமல், தந்தை  என்பதையே  கொண்டு  கூறியுள்ளார்
என்க.