சூ. 356 :

பொன்னென் கிளவி ஈறுகெட முறையின்

முன்னர்த் தோன்றும் லகாரம் மகாரம்

செய்யுள் மருங்கின் தொடரிய லான

(61)
 

க-து:

பொன் என்னும் சொல் செய்யுள் வழக்கிற்படுமியல்பு கூறுகின்றது.
  

பொருள் :  பொன்   என்னும்   ஈரெழுத்தொரு   மொழி,  செய்யுள்
வழக்கின்கண் தொடர்மொழியாகுமிடத்து, னகர இறுதி கெட அதன் முன்னர்
முறையே லகர உயிர்மெய்யும் மகர ஒற்றும் தோன்றும்.
 

எ - டு:  பொன் - பொலம்  எனத்தொடர்மொழியாகி   வரும்.  லகர
ஒற்றொடு மகரம் மயங்காதாகலின் லகரம் என்றது உயிர் மெய்யை என்பது
பெறப்படும்.
 

பொலம்   என    நின்ற     வழி     அவ்ஈறு  அம்முச்சாரியையின்
இயல்பிற்றாகலின் வல்லெழுத்துவரின் மகரம் கிளை ஒற்றாகத் திரியும் என்க.
இஃது உய்த்துணர்தலின் பாற்படும்.
 

எ - டு:   பொலங்கலஞ்  சுமந்த  (அகம்-16)  பொலஞ்சுட ராழியின்,
பொலந்தார்க்   குட்டுவன்   (புறம்-343)   பொலம்படை   (மலைபடு-574)
எனவரும்.  மெல்லெழுத்துவரின்   பொலநறுந்தெரியல்,  பொலமலர் எனக்
கெடுமென்க.
 

‘‘தொடரியலான’’  என்றது   தொடர்மொழி  இயல்பினதாக  ஆதற்கண்
என்றவாறு. இதுவும் மரீஇய மரபு  என்பதுணர  இதனை ‘முன்னென்கிளவி’
என்பதன் பின்வைத்தார் என்க.