பொருள் :சுட்டுவகர ஈறு ஒழிந்த ஏனை வகர ஈற்றுச் சொல்லாகிய தெவ் என்னும் உரிச்சொல்லீறு இருவழியும் ஞகார ஈற்றுத் தொழிற் பெயரியல்பிற்றாய் உகரம் பெற்றுப் புணரும்.
எ - டு:தெவ்வுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் தெவ்வுக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஞ ந ம என்பவற்றொடும் ஒட்டிக் கொள்க. தெவ்வு = பகைமை.
இதனானும் தெவ் என்னும் சொல் வினைநிலை எய்தி வாராமை புலனாம். உகரம் பெறாமல் மகரத்தொடு புணருமிடத்துத் தெம்முனை, தெம்மடங்கிய எனவரும். காரணம் வகரம் மகரத்தொடு மயங்குதற்கு ஏலாமையான் மகரமாகத் திரியும். இதனைப் புறனடையாற் கொள்க.