சூ. 389 :அளவும் நிறையும் எண்ணும் வருவழி 

நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் 

கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க  

(94)
 

க-து : 

ஏழ் என்னும்  சொல் பிற அளவைப் பெயர்களொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:   மேற்கூறிய  ஏழ்  என்னும்  சொல்முன் அளவுப் பெயரும்
நிறைப்  பெயரும்  எண்ணுப் பெயரும் வரும்வழி நெட்டெழுத்தாகிய முதல்
குறுகலும்  ழகரத்தின்  மேல் ஓர்   உகரம்   வருதலும்    ஆசிரியர்க்குத்
தவிர்க்கும் நிலையின்று. எனவே, முதல் குறுகும்; உகரம் பெறும் என்றவாறு.
 

எ - டு:  எழுகலம்,  சாடி,  தூதை,  பானை,  நாழி, மண்டை,  வட்டி
எனவும் எழுகழஞ்சு,   தொடி,  பலம்  எனவும்  எழுமூன்று,   எழுநான்கு,
எழுநூறு எனவும் வரும்.
 

அளவு  முதலிய   பெயர்க்குக்  கடிநிலை  இன்று என்றதனான் அவை
பிறபொருட் பெயராய் வரும்வழி இயல்பாக நின்று புணருமென்க.
 

எ - டு:  ஏழ்கலம் (கலம் - கப்பல்); ஏழ்மண்டை  (மண்டை-பாத்திரம்);
ஏழ்தொடி (தொடி-ஓர் அணிகலன்) எனவரும்.
 

‘‘கடிநிலையின்றே’’  என்றதனான்    மேல்விதந்து    கூறுவனவல்லாத
பிறபொருட்பெயர்கள்  வருங்கால்  நெடுமுதல்  குறுகி  உகரம்   பெறுதல்
ஈண்டே கொள்ளப்படும்.
 

எ - டு: எழுகடல்,  எழுசிறை, எழுதிசை, எழுபிறப்பு எனவரும். இவை
இயல்பாகப் புணர்தலே சால்புடைத்தாகும்  என்க.  வல்லெழுத்ததிகாரத்தை
மாற்றியமையான்   இயல்புகணத்தும்  இத்திரிபு  ஏற்புழிக்  கொள்ளப்படும்.
எழுநிலம் (செய்-164) எழுவகை (புறத்-20) எனவரும்.