சூ. 39 :ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும்
(6)
 

(ஈறியல் மருங்கினும் என்பது உரையாசிரியன்மார் பாடம்)
 

க-து:

ஆய்த எழுத்தின் இயல்பாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  முப்பாற்புள்ளியாகிய   அவ்ஆய்தஎழுத்தினது   இசைமை,
உயிரினது மருங்காகவும், ஒற்றினது மருங்காகவும் தோன்றிவரும்.
 

இசைமை =   எழுத்தாகஇசைக்குந்தன்மை.   ஈரியல்   =  உயிரியல்பும்
ஒற்றியல்பும். உயிரியல்பாவது : இசைத்துச்   செய்யுளின்கண்  அலகுபெற்று
வருதல். ஒற்றியல்பாவது: ஒலித்து  அலகு  பெறாது  அசைக்கு  உறுப்பாகி
வருதல்.
 

எ-டு :

அற்றால் அளவறிந் துண்க வஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கு மாறு

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை

யாண்டு மஃதொப்ப தில்
 

என உயிரியல்மருங்காய் அலகுபெற்று நின்றது.
 

தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்

தோன்றலிற் றோன்றாமை நன்று

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்
 

என அலகுபெறாது அசைக்கு உறுப்பாய் ஒற்றியல் மருங்காய் நின்றது. 
 

இவ்வாய்தம் உயிரைப்போல மெய்யினை ஊர்வதும்  மெய்யினைப்போல
உயிரினை ஏற்பதும் இன்றாதலின் ஈரியலானும் தோன்றும் என்னாது ஈரியல்
மருங்கினும் என்றார். மருங்கு  என்றது  ஒருபுடை  என்னும்  பொருள்பட
நின்றது.
 

இதனை   ‘ஈறியல்   மருங்கினும்’    என்றோதி    ஆய்தம்   புணர்
மொழியிடத்தும்   தோன்றும்   எனப்   பொருள்கூறி,   ஆண்டு  அஃது
குறுகுமென்றும்  விளம்பிக்   கஃறீது  முஃடீது  என  எடுத்துக்  காட்டுவர்
உரையாசிரியன்மார். அவ்வுரையினை ஓராது ஏற்ற பவணந்தியார்,
 

      

‘‘லளவீற் றியைபினாம் ஆய்தம் அஃகும்’’
 

எனக்கூறி   அதற்குஆய்தக்குறுக்கமெனப்   பெயரிட்டு    அதனையும்
ஒருசார்பெழுத்தாகப் படைத்துச் சென்றார்.
 

ஒருசொல்லின் இடையேயன்றி ஈற்றில் வாராத ஙகரம் டகரம் போல்வன
மரம் + குறிது = மரங்குறிது எனவும் பொருள்  +  குறை =  பொருட்குறை
எனவும், ஙகர டகரங்கள்  மகர  ளகரங்களின்  திரிபாக  வந்தமைபோலக்
கஃறீது  முஃடீது  என்பவை  லகர  ளகரங்களின்  திரிபாதலன்றி ஆய்தப்
புணர்ச்சியாகா என்பது வெளிப்படை. அஃகடிய என்பதும் அவ்வாறே வந்த
வகர ஈற்றுத்திரிபாகும்.
 

இச்சூத்திரத்தின்  நுட்பமும்  பயனும்  ஓராமல்  புணர்மொழி  ஆய்தம்
என்னும் திரிபுணர்ச்சியான் ‘‘ஈறியல்’’ எனப்பாடங் கொண்டமை பிழையாதல்
தெளியலாம். பிறவிளக்கங்களை எனது  சார்பெழுத்து  ஆய்வுக்கட்டுரையுட்
கண்டுகொள்க.