சூ. 39 : | ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும் |
(6) |
(ஈறியல் மருங்கினும் என்பது உரையாசிரியன்மார் பாடம்) |
க-து: | ஆய்த எழுத்தின் இயல்பாமாறு கூறுகின்றது. |
பொருள்: முப்பாற்புள்ளியாகிய அவ்ஆய்தஎழுத்தினது இசைமை, உயிரினது மருங்காகவும், ஒற்றினது மருங்காகவும் தோன்றிவரும். |
இசைமை = எழுத்தாகஇசைக்குந்தன்மை. ஈரியல் = உயிரியல்பும் ஒற்றியல்பும். உயிரியல்பாவது : இசைத்துச் செய்யுளின்கண் அலகுபெற்று வருதல். ஒற்றியல்பாவது: ஒலித்து அலகு பெறாது அசைக்கு உறுப்பாகி வருதல். |
எ-டு : | அற்றால் அளவறிந் துண்க வஃதுடம்பு |
| பெற்றான் நெடிதுய்க்கு மாறு |
| வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை |
| யாண்டு மஃதொப்ப தில் |
என உயிரியல்மருங்காய் அலகுபெற்று நின்றது. |
| தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் |
| தோன்றலிற் றோன்றாமை நன்று |
| அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் |
| வெஃகி வெறிய செயின் |
என அலகுபெறாது அசைக்கு உறுப்பாய் ஒற்றியல் மருங்காய் நின்றது. |
இவ்வாய்தம் உயிரைப்போல மெய்யினை ஊர்வதும் மெய்யினைப்போல உயிரினை ஏற்பதும் இன்றாதலின் ஈரியலானும் தோன்றும் என்னாது ஈரியல் மருங்கினும் என்றார். மருங்கு என்றது ஒருபுடை என்னும் பொருள்பட நின்றது. |
இதனை ‘ஈறியல் மருங்கினும்’ என்றோதி ஆய்தம் புணர் மொழியிடத்தும் தோன்றும் எனப் பொருள்கூறி, ஆண்டு அஃது குறுகுமென்றும் விளம்பிக் கஃறீது முஃடீது என எடுத்துக் காட்டுவர் உரையாசிரியன்மார். அவ்வுரையினை ஓராது ஏற்ற பவணந்தியார், |
| ‘‘லளவீற் றியைபினாம் ஆய்தம் அஃகும்’’ |
எனக்கூறி அதற்குஆய்தக்குறுக்கமெனப் பெயரிட்டு அதனையும் ஒருசார்பெழுத்தாகப் படைத்துச் சென்றார். |
ஒருசொல்லின் இடையேயன்றி ஈற்றில் வாராத ஙகரம் டகரம் போல்வன மரம் + குறிது = மரங்குறிது எனவும் பொருள் + குறை = பொருட்குறை எனவும், ஙகர டகரங்கள் மகர ளகரங்களின் திரிபாக வந்தமைபோலக் கஃறீது முஃடீது என்பவை லகர ளகரங்களின் திரிபாதலன்றி ஆய்தப் புணர்ச்சியாகா என்பது வெளிப்படை. அஃகடிய என்பதும் அவ்வாறே வந்த வகர ஈற்றுத்திரிபாகும். |
இச்சூத்திரத்தின் நுட்பமும் பயனும் ஓராமல் புணர்மொழி ஆய்தம் என்னும் திரிபுணர்ச்சியான் ‘‘ஈறியல்’’ எனப்பாடங் கொண்டமை பிழையாதல் தெளியலாம். பிறவிளக்கங்களை எனது சார்பெழுத்து ஆய்வுக்கட்டுரையுட் கண்டுகொள்க. |