சூ. 390 :

பத்தென் கிளவி ஒற்றிடை கெடுவழி 

நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி  

(95)
 

க-து:

ஏழ்  என்பதன்  முன்வரும்  பத்து  என்னும்  சொல் திரியுமாறு
கூறுகின்றது.
 

பொருள் :ஏழ்  என்பதன்  முன்வரும்   பத்து   என்னும்  சொல்லின்
இடைநின்ற  ஒற்றுக்கெடுமிடத்து  ஆண்டு ஆய்தப்  புள்ளியாகிய  எழுத்து
நிற்றல் வேண்டும்.
 

எ - டு:   எழுபஃது எனவரும். ஒன்று முதலாய எண்களின் முன்னர்ப்
பத்து என்னும் சொல்லின் இடை ஒற்றுக்கெட்டு ஆய்தமாதல் குற்றியலுகரப்
புணரியலுள்  விதிப்பார்  எனினும் ஏழ் என்பது குற்றியலுகர ஈறன்மையான்
அவ்விதிகள் இதற்குச் செல்லாமை நோக்கி ஈண்டு விதித்தார் என்க.
 

எழுபத்தொன்று, எழுபத்திமூன்று  என்றாற்போலப் பத்து  என்பது பிற
எண்ணொடு   தொடர்ந்து   வருங்கால்  இடையொற்றுக் கெடாது; தனித்து
வந்துழியே கெடும் என்பதனை உணர்த்த ‘‘ஒற்றிடைகெடுவழி’’ என்றார்.