பொருள்: நெட்டெழுத்தின் பின் நிற்கும் ளகர ஈற்றுச் சொற்கள் சில இயல்பாக வருவனவும், வேற்றுமைப் புணர்ச்சியல்லாத அல்வழிக்கண் வேற்றுமைப் புணர்ச்சிக்குரிய விதியொடு நிற்றலும் உளவாம்; அவற்றைப் (மரபுணர்ந்து) போற்றிக் கொள்ளுதல் வேண்டும். |
எ - டு: கோள்கடிது; தாள்கடிது, சிறிது, பெரிது என இவை இயல்பாக வந்தன. நாட்கடிது-புட்பறந்தற்றே, உட்பொருள் என வேற்றுமையல்வழித் திரிந்தன. புட்டேம்பப் புயன் மாறி என்பது தகரம் வருதலினால் எய்திய திரிபாகலின் அதனைக் காட்டல் நிரம்பாதென்க. |
இனி வெட்பாலை, கோட்பாடு என்றாற் போல இருமொழி ஒரு சொல்லாய் நிற்பனவற்றையும், நாட்படவரும் என்றாற் போலப் புணர்மொழியாக வருவனவற்றையும் ஓர்ந்தறிதல் வேண்டுமென்பார் ‘போற்றல் வேண்டும்’ என்றார். |
உதளங்காய் எனச் சாரியை பெறுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். சாரியை பெறுதல் “பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப’’ (புண-30) என்னும் சூத்திரத்தான் எய்துமாகலின் ஈண்டு அமைத்தல் வேண்டா என்க. |