|
சூ. 401 : | தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல | (106) | க-து: | ளகர ஈற்றுத் தொழிற்பெயர் புணருமாறு கூறுகின்றது. | பொருள்: ளகார ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம் இருவழியும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயரியல்பினவாய் உகரம் பெற்று வல்லெழுத்து வரின் மிக்கும் ஞநமவரின் இயல்பாயும் புணரும். | எ - டு: துள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். துள்ளுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வேற்றுமைக்கண்ணும் ஒட்டிக் கொள்க. | உரையாசிரியன்மார் கோள் கடிது - கோட்கடிது;வாள்கடிது - வாட்கடிது என உகரம் பெறாது உறழ்ந்து வருவனவும் கொள்க என்பார். கோள் என்பது கொள் என்னும் முதனிலைத் தொழிற் பெயர் திரிந்து பெயர்ப் பொருட்டாய் நிற்கும் சொல்லாகலானும் வாள் என்பது பெயருரிச் சொல்லாக நிற்றலானும் அவர் கருத்துப் பொருந்தாதென்க. | வாள் என்பது கொல்லுதல் என்னும் பொருள் தரும் தொழிற் பெயர் என்பார் ஒருசாரார். சொல்லுதல் என்னும் பொருள் தரும் தொழிற்பெயர் என்பார் ஒருசாரார். வாள் என்பதனடியாக வினைமுற்றும் இருவகை எச்சமும் பிறவாமையான் உரிச்சொல் எனக்கோடலே சாலுமென்க. |
இனி, வாளாதி - வாளாதே என வினையாக வருதலின் தொழிற்பெயராகக் கொள்ளலாமெனின்? அஃது இன்னா, பொல்லா என்பவை போலப் பண்புரிச் சொல்லடியாகப் பிறந்த எதிர்மறைக் குறிப்புச் சொல்லாவதன்றி முதனிலைத் தொழிற் பெயராகாதென்க. | இச்சொல் செயலறவைக்குறித்து வாளாவிருந்தான், வாளாகிடந்தான், வாய்வாளாதி, வாய்வாளாதே என எதிர்மறையே குறித்து வருதலன்றி யாண்டும் விதி வினையாக வாராமையறிக. வாள் என்பது ‘சொல்’ என்னும் பொருள்பட நிற்கும் உரிச்சொல் என்றலே நேரிது. |
|