சூ. 401 :தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல
(106)
 

க-து:

ளகர ஈற்றுத் தொழிற்பெயர் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:   ளகார  ஈற்றுத்  தொழிற்பெயரெல்லாம் இருவழியும் ஞகார
ஈற்றுத்  தொழிற்பெயரியல்பினவாய்  உகரம்  பெற்று  வல்லெழுத்து வரின்
மிக்கும் ஞநமவரின் இயல்பாயும் புணரும்.
 

எ - டு:  துள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, சிறிது, தீது, பெரிது  எனவரும்.
துள்ளுக்கடுமை,   சிறுமை,  தீமை,  பெருமை  என  வேற்றுமைக்கண்ணும்
ஒட்டிக் கொள்க.
 

உரையாசிரியன்மார்  கோள் கடிது - கோட்கடிது;வாள்கடிது - வாட்கடிது
என   உகரம்  பெறாது   உறழ்ந்து  வருவனவும் கொள்க என்பார். கோள்
என்பது கொள் என்னும்  முதனிலைத்   தொழிற்  பெயர் திரிந்து பெயர்ப்
பொருட்டாய்   நிற்கும்  சொல்லாகலானும்  வாள்   என்பது    பெயருரிச்
சொல்லாக நிற்றலானும் அவர் கருத்துப் பொருந்தாதென்க.
 

வாள்  என்பது  கொல்லுதல்  என்னும் பொருள் தரும் தொழிற் பெயர்
என்பார் ஒருசாரார். சொல்லுதல் என்னும் பொருள்  தரும்  தொழிற்பெயர்
என்பார்   ஒருசாரார். வாள்   என்பதனடியாக  வினைமுற்றும்  இருவகை
எச்சமும் பிறவாமையான் உரிச்சொல் எனக்கோடலே சாலுமென்க.
 

இனி,   வாளாதி   -   வாளாதே   என    வினையாக    வருதலின்
தொழிற்பெயராகக்    கொள்ளலாமெனின்?   அஃது   இன்னா,  பொல்லா
என்பவை போலப் பண்புரிச்  சொல்லடியாகப் பிறந்த எதிர்மறைக் குறிப்புச்
சொல்லாவதன்றி முதனிலைத் தொழிற் பெயராகாதென்க.
 

இச்சொல்   செயலறவைக்குறித்து  வாளாவிருந்தான்,  வாளாகிடந்தான்,
வாய்வாளாதி,  வாய்வாளாதே   என  எதிர்மறையே  குறித்து வருதலன்றி
யாண்டும் விதி வினையாக  வாராமையறிக. வாள் என்பது ‘சொல்’ என்னும்
பொருள்பட நிற்கும் உரிச்சொல் என்றலே நேரிது.