வரலாறு: ஞகர நகர ஈறுகள் உரிஞின் குறை, பொருநின் குறை, வெரிநின் குறை என வேற்றுமைக்கண் இன்சாரியை பெறுதலும்; ணகர ஈறு மண்ணப்பந்தம், எண்ணநோலை எனவும் மண்ணுக்குள், விண்ணுக்குள் எனவும், ஆணின்கால், மண்ணின்மேல் எனவும் முறையே அகரமும், உகரமும் இன்னும் ஆகிய சாரியை பெறுதலும்; மகர ஈறு குளத்துக்கரை, மருதத்துப்புறனே, மரத்தின்புறம் என அத்தும் இன்னும் ஆகிய சாரியை பெறுதலும்; னகர ஈறு நாயின் கால், வேயின் தலை என இன்சாரியை பெறுதலும்; ரகர ஈறு அல்வழிக்கண் நீர் குறைந்தது, நீர் சுருங்கிற்று என உறழாது இயல்பாதலும்; லகர ஈறு வேற்றுமைக்கண் விழன்காடு என னகரமாதலும்; ஆலங்கானம், புடோலங்காய் என அம்முச்சாரியை பெறுதலும்; அழலத்துக் கொண்டான் என அத்துச்சாரியை பெறுதலும்; அல்வழிக்கண் அழுக்கற் போர் என றகரமாகத் திரிதலும்; நெல்லுப் பெற்றேன், சொல்லுக்குத் தோற்றது, கல்லுப்பாறை என இருவழியும் உகரம் பெறுதலும்; கல்லம்பாறை என அல்வழிக்கண் அம்முப்பெறுதலும்; வகர ஈற்றுள் தெவ் என்பது தெம்முனை என மகரமாகத் திரிதலும்; ழகர ஈறு, வேற்றுமைக்கண் யாழின்கோடு என இன்சாரியை பெறுதலும்; ஏழுநாள், பதினேழு என எண்ணுப்பெயர் அல்வழிக்கண் உகரம் பெறுதலும்; ளகர ஈறு வேற்றுமைக்கண் ஒருநாளைக்குழவி, ஒரு திங்களைக் குழவி என ஐகாரச் சாரியை பெறுதலும்; வாளின்புறம் என இன்சாரியை பெறுதலும்; தேளுக்குப் பகை, கொள்ளுக்கு விற்றான் என உகரம் பெறுதலும்; பிறவும் அவ்வச் சூத்திரங்களுள் புறனடையாற் கொள்ளத்தகும் என்றவையும் பிறவும் இவ்வாறு பொருந்தவருவனவெல்லாமும் ஆம் என அமைத்துக் கொள்க. |