சூ. 409 :

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் 

தொல்லை இயற்கை நிலையலும் உரித்தே 

(4)
 

க-து :

‘‘இடைப்படிற்  குறுகும்  இடனுமா  ருண்டே’’ என மொழிமரபிற்
கூறிய வண்ணம் குற்றியலுகரம் தனக்குரிய அரைமாத்திரையினும்
குறுகி ஒலிக்கும் இடம் கூறுகின்றது.
 

பொருள்:  வல்லொற்றுத்   தொடர்ந்த    குற்றியலுகரம்   வருமொழி
வல்லெழுத்து வந்து புணருமிடத்து ‘‘அவ்வியல் நிலையும் ஏனை  மூன்றே’’
என்ற இலக்கணத்ததாய்  நிலைபெறுதலும்  உரித்தாகும். உம்மை எதிர்மறை.
அதனான்  தனக்குரிய அரைமாத்திரையளவினும் குறுகி நிற்றலும் உரித்தாம்
என்றவாறு.
 

வரும்   வல்லெழுத்து  நிலைமொழிக்கண் உள்ள எழுத்தாகவே வரின்,
என்பது குறிப்பாக  விளங்க ‘‘வல்லொற்றுத்  தொடர்மொழி  வல்லெழுத்து’’
என்றார். பிற வல்லெழுத்து வரின் கூறுவோனது முயற்சிக்கேற்பக் குறுகியும்,
குறுகாதும் வரும் என்க.
 

அரைமாத்திரையினும்  குறுகி நிற்குமாறு: கொக்குக்குறிது, கச்சுச்சுருக்கம்,
பத்துத்துடி,   செப்புப்புதிது  எனவரும்.   இவற்றை   விட்டிசையாது  கூறி
மாத்திரை குறைந்து நிற்றலை அறிக. கொக்குக்கடிது, கச்சுச்சிறிது  என்பவை
கூறுவோன் முயற்சியை ஒட்டிக்  குறுகியும்  நிற்கும்;  குறுகாதும்   நிற்கும்.
கொக்குச்  சிறிது,  கச்சுப்  பெரிது என  வரும் வல்லெழுத்துப் பிறிதாயின்
குறுகாது.
 

குறுகல்,      நீளல்,    மிகுதல்,    திரிதல்   என்பவை   ஒலிபற்றிய
இலக்கணமாதலின் இவற்றை வாயாற் சொல்லிச் செவிமடுத்தறிக.