சூ. 41 :குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்

நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே
(8)
 

க-து:

நூன்மரபிற் றோற்றுவாய் செய்த உயிரளபெடை ஆமாறு
கூறுகின்றது.
 

பொருள்:செய்யுட்கண் வரும்  மொழியிடத்து  (பா  என்னும்  உறுப்பு
நிகழ்தற்கும்  சீராதற்கும்)  வேண்டுமளவின்றி  எழுத்துக்  குன்றியிசைப்பின் அதன்கண்    உள்ள    நெட்டெழுத்தின்பின்     அதன்     இனமாகிய உயிர்க்குற்றெழுத்து அதனைச்சார்ந்து நின்று  இசைநிறைக்கும் எனக்கூறுவர்
புலவர்.
 

குற்றெழுத்து  நின்று  இசை   நிறைக்கும்  என்றதனான், அது பொருள்
பயவாது என்பது  பெறப்படும்.   அதனான்  நெட்டெழுத்தின்  ஓசையொடு
குற்றெழுத்தின் இசையைச்  சேர்த்து  நீட்டிக்கொள்க  என்பது  கருத்தாதல்
உணரப்படும். எழுத்தென்றது ஒலிஉருவை. வரிவடிவின்கண் அடையாளமாக
அமையும்.
 

எ-டு:

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 

ஆஅதும் என்னு மவர் (குறள்-365) எனவரும்.
 

தமிழ்மொழியில்  மூன்று  மாத்திரை  நான்கு  மாத்திரை  எழுத்துக்கள்
வகுக்கப்படாமையின்  ஒத்த  குற்றெழுத்து  இசை  நிறைக்கும்    என்றும்,
இங்ஙனம்   அளபெடுப்பது    நெட்டெழுத்தே    என்றும்     அறிவிக்க
‘நெட்டெழுத்திம்பர்’ என்று கூறினார்.
 

ஒத்த  குற்றெழுத்து   என    ஈண்டு    ஒருமைவாய்பாட்டாற்   கூறி
நூன்மரபின்கண் “அவ்வளபுடைய   கூட்டி     எழூஉதல்”   என்றதனான்
குற்றெழுத்தின்  ஓசை   ஒவ்வொன்றாக   இணைந்திசைக்கும்    என்பதும்
அவ்வாறே   வரிவடிவம்    எழுதிக்     கொள்ள    வேண்டுமென்பதும்
உய்த்துணரவைத்தார்.
 

எ-டு:

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய்க் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு (குறள். 1200) எனவரும்.
 

இயற்றமிழ்ச்  செய்யுட்கண் நான்கு  மாத்திரையினும் ஓர் எழுத்துமிகாது
என்க.