குற்றியலுகர ஈற்றின் முன் யகரம் வந்து புணருங்கால் ஆண்டு யகரத்தொடு ஒலி ஒற்றுமையுடைய குற்றியலிகரம் ஆசாக வருதலும், அஃது அரைமாத்திரையே உடைய சார்பெழுத்தாகலின் குற்றியலுகரத்தின் மேல் ஏறி முடிதற்காகாமையும் நோக்கிக் குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யை நிறுத்தித் தன் ஓசை தோன்றாது என்றார்.உகரம் கெடும் எனின் மொழிப்பொருள் திரியுமாதலின், ‘உகரக் கிளவி துவரத் தோன்றாது’ என்றார். கிளவி என்றது அவ் எழுத்தொலியை. குற்றியலிகரம் யகரமெய்யைச் சார்ந்தேவரும் என்பதனை மியா என்னும் அசைச் சொல்லானும் அறிக. மற்று, நாகு + யாது = நாகியாது என வந்துழி நிலைமொழி குற்றியலுகர ஈற்றுச் சொல்லாகப் பொருள் தருமாறு யாங்ஙனம் எனின்? நாய்- நாஇ என யகரப் புள்ளிக்கு இகரமும் மனம் - மனன்; அறம் - அறன் என மகரப்புள்ளிக்கு னகரப் புள்ளியும் பொருள் சிதையாமல் மாற்றெழுத்தாக வருமாறு போலக் குற்றியலுகரம் யகரமெய்யொடு புணரும் புணர்மொழிக்கண் குற்றியலிகரம் அதற்கு மாற்றெழுத்தாக வருமென்க. இதனை முடிந்தது காட்டல் என்னும் உத்தியான் ஆசிரியர் கொள்ள வைத்த சதுரப் பாட்டினையும் அறிந்துகொள்க. |