சூ. 414 :

வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் 

வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே 

மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் 

வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்  

(9)
 

க-து:

வன்றொடரும் மென்றொடரும் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  வன்றொடர்க்  குற்றுகர  மொழியும் மென்றொடர்க் குற்றுகர
மொழியும் நிற்ப, வருமொழி வல்லெழுத்தினது  ஒற்று அவ்விடையே மிகும்;
மெல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரத்தின்   மெல்லொற்றுக்களெல்லாம்
கிளையொற்றாகிய வல்லெழுத்தாகி முடியும்.
 

இச்சூத்திரத்துள்,    முன்இரண்டடிகள்    ஒரு   சூத்திரமாகவும்  பின்
இரண்டடிகள்    ஒரு     சூத்திரமாகவும்       இருத்தல்    வேண்டும்.
உரையாசிரியன்மாரால்    வழக்குநோக்கி    ஒன்றாக    வைத்து   உரை
கூறப்பட்டதென்க.
 

பிறப்பு முறையான் ஒத்து வளிவகையான்   வேறுபடுதலின் வல்லினமும்
மெல்லினமும் ஒன்று ஒன்றற்குக் கிளையாயின.
 

எ - டு: (1) கொக்குக்கால், செவி, தலை,  புறம்  எனவும் குரங்குக்கால்,
செவி, தலை, புறம் எனவும் வரும். இவை  வல்லெழுத்துமிக்கன.   ஏனைக்
கணங்கள்வரின் இயல்பாதல் தொகைமரபின்கண் கூறப்பட்டது. (2) எண்கு +
குட்டி  =    எட்குக்குட்டி,   செவி, தலை, புறம்      எனவும்    குரங்கு
+  கால்   = குரக்குக்கால்,    செவி,   தலை,   புறம்   எனவும்   வரும்.
என்பு+காடு-எற்புக்காடு;   கரும்பு + கட்டி- கருப்புக்கட்டி  என   இவ்வாறு
வருவனவெல்லாம்          கொள்க.       இவை    மெல்லொற்றுக்கள்
கிளையொற்றுக்களாகத் திரிந்து வருமொழி வல்லெழுத்து மிக்கன.
 

கிளையொற்றாதற்கு      வருமொழி      வரைந்து     கூறாமையான்
ஏனைக்கணத்தும் ஏற்பன கொள்க. எ.டு:   குரக்குஞாற்சி,  நிலை,  மாட்சி,
விரல், உகிர் எனவும்; எற்புடம்பு, சிலப்பதிகாரம், கற்றா எனவும் வரும்.
 

“எல்லாம்” என்றதனான் பந்துத்திரட்சி,   எறும்புப்புற்று  மஞ்சுப்புரப்பு
எனக்   கிளையொற்றாகத்   திரியாமல்   வருதலும்,    “வல்லொற்றிறுதி”
என்றதனான், அற்புத்தளை, சுருப்புநாண்  எனத்  திரிந்து   அல்வழிக்கண்
இருபெயரொட்டாக வருதலும் கொள்க.