சூ. 44 :குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே 
(11)
 

க-து:

இதுவுமது.
 

பொருள்:  குற்றெழுத்து  ஐந்தும்  தனித்து  நிறைவுடைய  மொழியாக
வருதலில்லை. நிறைவுடைய மொழியாவன பெயரும், வினையுமாம். எனவே
குறைவுடையனவாய் இடைச்சொல்லும்  உரிச்சொல்லுமாக  வரும்  என்பது
கருத்து.
 

அஃதாவது   சுட்டுப்பெயர்    வினாப்பெயர்கட்கு    முதனிலையாயும்,
சுட்டிடைச் சொல்லாயும், ஒப்புணர்த்தும் குறையுரிச்சொல்லாயும் வரும்.
 

எ-டு : அவ்வீடு, இப்பொருள், உக்கடல், எவன், ஒவ்வும், எனவரும்.
 

இனி ஐந்தும் என்னும்  முற்றும்மையை  எச்சமாக்கி மொழி  நிறைபாகச்
சிலவருதலும் கொள்க.
 

எ-டு :  து-நொ,  எனவரும்.   இவைபடுத்தலோசையாற்  பெயரும்,
எடுத்த லோசையான் வினையும்ஆம், ஓராற்றான் இவையும்  முதனிலைகளே
ஆதலின் உம்மையாற்றழுவப்பெற்றன என்க.