சூ. 475 : | ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி |
| ஒன்றுமுதல் ஒன்பாற்கு ஒற்றிடை மிகுமே |
| நின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும் |
(70) |
க-து: | அடையடுத்துவரும் பஃதென்பது ஒன்று முதல் ஒன்பான் வரையுள்ள எண்ணுப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: ஒன்றுமுதல் எட்டுவரை ஊர்ந்து நிற்கும் பஃதென்னும் சொல், வரும் ஒன்றுமுதல் ஒன்பான் எண்ணுப் பெயர்கட்குமுன் இடைநின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும். அவ்விடத்து இன ஒற்றுமிக்கு நிற்கும். |
எ-டு: ஒருபத்தொன்று, இருபத்தொன்று, முப்பத்து மூன்று எனவரும். ஏனையவற்றொடும் இவ்வாறே கூட்டிக் கொள்க. |
இவ்ஆய்தம் மேலே 32ஆம் சூத்திரத்தான் விதிக்கப்பட்டதாகும். திரிந்ததன் திரிபு அது என்னும் நயத்தான் ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி என்றார். அதிகாரத்தான் நூற்றொருபத்தொன்று என அடையடுத்து வரினும் கொள்க. |