சூ. 480 :

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர்

வழங்கியல் மாவென் கிளவி தோன்றின்

மகர அளவொடு நிகரலும் உரித்தே

(75)
 

க-து:

இரண்டு  முதலாய  எண்ணுப்  பெயர்கள்  மாஎன்னும்  ஒருசார்
நிலஅளவைப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  இரண்டுமுதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப் பெயரின்முன்,
வரையறுத்த  நீட்டல்  அளவையினைக்குறித்து  வழங்கும்  ‘மா’  என்னும்
சொல் வந்து புணரின், மேலே மகரம் முதலாய  மண்டை என்னும் அளவுப்
பெயருக்கு ஓதிய விதியை ஒத்தலும் உரித்தாகும்.
 

அஃதாவது திரிந்து புணர்தலன்றி உம்மையான் திரியாது செஞ்சொல்லாக
நின்றும் புணரும் என்றவாறு.
 

மா என்பது பலபொருளொரு சொல்லாதலின், ‘வழங்கியல் மா’’ என்றார்.
மண்டை என்பது முகத்தலளவைப் பெயர்.
 

ஆசிரியர்    முகத்தலளவை,     நிறுத்தலளவை,    எண்ணலளவைப்
பெயர்களையே    விதந்து    இதுகாறும்     விதி     கூறிவந்தமையான்
வரையறையுடைய  இம் ‘மா’  என்னும்  நீட்டலளவைப் பெயர்  அவற்றுள்
அடங்காமை  கருதி  மண்டை   என்னும்   முகத்தலளவைப்   பெயரொடு
மாட்டெறிந்து  கூறி,  இது  இயல்பாயும்  புணர்தலான்  எதிர்மறை-உம்மை
கொடுத்து அமைத்தார் என்க.
 

நூறு குழி கொண்டது ஒருமா. ஒரு வேலியின் இருபதிலொருகூறு.
 

எ-டு:  இருமா, மும்மா, நான்மா,  (நாலுமா  என்பது  வழக்கு)  ஐம்மா,
ஆறுமா, எண்மா  எனவும்  இரண்டுமா,  மூன்றுமா,  நான்குமா,  ஐந்துமா,
ஆறுமா, எட்டுமா, ஒன்பதுமா  எனவும் வரும். எழுமா,  ஏழுமா  என்பவை
ழகர ஈற்றுள் அடங்கும்.
 

ஒன்றென முடித்தல் என்னும்  உத்தியான்  பத்துமா,  நூறுமா  எனவும்
ஒருபதுமா, இருபதுமா எனவும் ஆயிரமா எனவும் பிற எண்ணுப் பெயரொடு
முடிதலும் கொள்க.
 

இனி ஒன்றன் கூறாகிய ஒருமா, இருமா, மும்மா,  நான்மா, என்பவற்றை
நிலைமொழி   வருமொழி  செய்து  புணர்ப்பினும்  இவ்விதி  ஒக்குமெனக்
கொள்க.மா என்பது இருபதின் ஒருகூறு.
 

இரண்டு முதல் ஒன்பானிறுதி என்றதனான்  ஒன்றுமா  எனவாரா என்க.
அதனான், அஃது ஒருமா எனத்திரிந்தே வருதல் பெறப்படும்.