சூ. 50 :குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்

தொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத் தியல 
(17)
 

க-து:

ஓசை பற்றித்  தொடர்  மொழிகட்காவதோரியல்பு  கூறுமுகத்தான்
புள்ளி மயங்கியலையும், செய்யுளியலையும்  நோக்கியதொரு கருவி
கூறுகின்றது.
 

பொருள்:   குற்றெழுத்து   நெட்டெழுத்தென்னும்     குறியீடுகளைத்
தொல்லாசிரியன்மார்   மாத்திரையளவையாற்   கொள்ளுதலான் ஓராற்றான்
தொடர்மொழிகள்    எல்லாம்      செய்கைப்படுமிடத்து   நெட்டெழுத்து
இயல்பினவாகும்.
 

‘நெட்டெழுத்தியல’ என்றது நெட்டெழுத்துப் போலும் இயல என்றவாறு.
ஆதலின்  கவர்ச்சி,  புகழ்ச்சி  என்பவற்றின்  முதனிலைகளாய  கவர்-புகழ்
என்னும் குறிலிணை ஒற்றுக்கள் நெடிற்கீழ்  ஒற்றுப்போலக்  கொள்ளப்படும்.
அதனானன்றே நிகர், பகல், துகள் என்றாற்போல்வன  நேர்,  பால்,  தூள்
எனத் திரிவனவாயின.
 

இதன் பயனாவது, தொகைமரபின்கண் ‘‘நெடியதன் முன்னர்  ஒற்றுமெய்
கெடுதலும் குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட்டலும்  அறியத்  தோன்றிய
நெறியிய  லென்ப’’  (தொகைமரபு-18)  என்னுஞ்  சூத்திரத்து  ‘‘நெடியதன்
முன்னர் ஒற்றுமெய் கெடுதலும்’’  என்ற  விதி,  கோல்  +  தீது = கோறீது,
கோல் + நன்று = கோனன்று; வேள் + தீயன் = வேடீயன். வேள் + நல்லன்
= வேணல்லன்  எனவரும்  நெடிற்கீழ்  ஒற்றிற் கேயன்றிக், கனல்  + தீது =
கனறீது, புனல் + நன்று =  புனனன்று;  துகள்  +  தீது  = துகடீது, துகள் +
நன்று = துகணன்று  எனவரும்  குறிலிணைக்கீழ்  ஒற்றிற்கும்;  தோன்றல் +
தீயன் =  தோன்றறீயன்;  தோன்றல் + நல்லன் = தோன்றனல்லன். காந்தள்
+ தீது = காந்தடீது.  காந்தள்  +   நன்று   =   காந்தணன்று   எனவரும்
தொடர்மொழிகளுள் குற்றெழுத்தின் பின்னின்ற ஒற்றிற்கும் பொருந்து மென
உணர்த்துதலாம். இங்ஙனம் வருவனவெல்லாம்  அடங்கற்குத் தொடர்மொழி
‘எல்லாம்’ என விளங்கக்கூறினார் என அறிக.