மூவகைமொழிகளுள் ஓரெழுத்தொருமொழிகள் தாமே மொழியாகி நிற்றலின் அவை, உயிரெழுத்தாயின் புணர்மொழியிடத்து நிறுத்தசொல்லாக வருங்கால் ஈறாகவும் குறித்து வருகிளவியாக வருங்கால் முதலாகவும் கொள்ளப்படும். உயிர்மெய்யெழுத்துக்கள் ஓரெழுத்தொருமொழியாக நிற்குமிடத்து மெய்ம் முதலாகவும் உயிரீறாகவும் கொள்ளப்படும். இதனை, ‘உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே’ என்பதனான் அறியலாம். |
எ-டு : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என நெட்டெழுத்து ஏழும் (ஒள=சுருங்கு) தனித்துவந்தன. ஆவி, ஈகை, ஊழி, ஏணி, ஐயை, ஓசை, ஒளவை என ஈரெழுத்தொருமொழிக்கண்ணும் ஆடவர், ஈதல், ஊடல், ஏற்றம், ஐயன், ஓங்கல், ஒளவியம் எனத் தொடர் மொழிக்கண்ணும் வந்தன. |
‘‘குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே’’ என்றதனான் சிறுபான்மை அ, இ, உ இம்மூன்றும் தனித்துச்சுட்டி வரும். அடை, இலை, உடை, எரி, ஒளி எனவும் அரசன் - இரவலன் - உலகம் - எழில் - ஒற்றன் என ஏனைய இருவகை மொழிகளுள் வரும். இவை நால்வகைச் சொற்களினும் ஏற்ற பெற்றிவரும். |