சூ. 62 :சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே
அஐ ஒளஎனும் மூன்றலங் கடையே

(29)
 

க-து:

சகர  மெய்  ஒன்பது  உயிரிசைகளொடு  கூடி  உயிர்மெய்யாய்
வருமென்கிறது.
 

பொருள்:சகரமாகிய எழுத்தும் அ ஐ ஒள என்னும் மூன்றும் அல்லாத
ஏனைய  உயிரோசைகளுடன் மேலனவற்றைப் போல மொழி  முதலாதற்குச்
செல்லும்.  உம்மை எச்ச உம்மை. மூன்றும் என்னும் முற்றும்மை  தொக்கது.
கிளவி - கிளத்தலை உடையது என எழுத்தின் மேலாயிற்று.
 

எ-டு :   சாரல்,  சின்னம், சீரை, சும்மை, சூழ்ச்சி, செல்வம், சேவல்,
சொன்றி, சோனை எனவரும்.
 

வடவெழுத்தொரீஇ எழுத்தொடு  புணர்ந்து  செய்யுட்சொல்லாக  வரும்
வடசொற்களை   இவ்வதிகாரப்   புறனடையாற்  கொள்க.  எ-டு: சடை,
சதுக்கம், சமன், சமழ்ப்பு, சகடம் எனவரும்.
 

சைனம்-சயினம், சையம், சௌரியம் எனச்சிதைந்து வரும் வடசொற்கள்
இயைந்தன அன்மையின் கொள்ளப்பெறா என்க.