சூ. 70 :கவவோ டியையின் ஒளவு மாகும்
(37)
 

க-து: 

ஒளகார உயிர் மெய்யொடு கூடி ஈறாம் என்கின்றது.
 

பொருள்:  மேல்விலக்கப்பட்ட ஒளகாரம்  ககர   வகர  மெய்களொடு
இணைந்த உயிர்மெய்யாயின் ஈறாக நிற்றற்காகும்.
 

உயிர்மெய்   ஓரெழுத்தே   எனினும்   ஓசைபற்றிப்   புணரியல்  விதி
கூறுதலானும்    ‘‘உயிர்மெய்    யீறும்   உயிரீற்    றியற்றே’’   என்பது
இலக்கணமாகலானும்   ஈண்டுக்கூறும்   மொழிநிலைகள்    புணரியலுக்குக்
கருவிகளாகலானும் ‘‘கவவோ டியையின் ஒளவு மாகும்’’ என்றார்.
 

எ - டு :  கௌ  -  வௌ   எனவரும்.   இஃது     ஓரெழுத்தொரு
மொழிக்கண்ணன்றி   வராமையான்,  ‘ஒளவும்’  என  இழிவு  சிறப்பும்மை
கொடுத்தோதினார்; அன்றி எச்ச உம்மை எனினும் ஆம்.
 

‘‘ஒள’’      அதிகாரப்பட்டமையானும்      இறுதிநிலை       பற்றிய
இலக்கணமாகலானும்  இறுதி  நிரலாக  இனிவருவனவற்றைக்  கூறுகின்றார்.
(இறுதிநிரல் = இறுதியைத் தொடக்கமாக எண்ணுதல்)