சூ. 74 :உஊ காரம் நவவொடு நவிலா
(41)
 

க-து:

உகர ஊகாரங்கள் மெய்யொடு கூடி ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்: உகர ஊகாரம் ஆகிய உயிரெழுத்துக்கள் நகரமெய் வகரமெய்
ஆகியவற்றொடு   கூடி   மொழியிறுதிக்கண்   இசைக்கமாட்டா.   ஏனைய
மெய்களோடு கூடி இசைக்கும் என்றவாறு.
 

எ - டு: நகு,  உசு,  கடு,  அணு,  அது,  தபு, உருமு, உரு, கமு, உறு,
மின்னு எனவும் நகூ, முசூ, உடூ, என்னூ, தூ, பூ, கொண்மூ, பரூ, பழூ, உறூ
எனவும்   வரும்.   இவற்றுள்   பெயர்    அல்லாதன    விளிப்பெயரும்,
எச்சவினைகளுமாம். ஏனைய வந்துழிக் காண்க.
 

நவவொடும்  எனப்  புணர்ச்சிவிகாரத்தாற்  குன்றிய  எச்ச  உம்மையை
விரித்து, மேற்கூறிய ஞகரத்தொடும் நவிலா என்க. உரிஞு,  பொருநு,  கதவு,
வரவு, செலவு என்பவை உகரச்சாரியை பெற்ற விதியீறுகளாகும். இனி, வரவு,
செலவு,   கனவு,    புரவு     முதலாயவற்றை     இயல்பீறாகக்    கருதி
உரையாசிரியன்மார் உகரம் வகரத்தொடு   ஈறாதலை   ‘‘நவிலா’’  என்னும்
மிகையாற்கொள்க என்பர். இவையாவும்  விதியீறுகளாதலின்  அவர் கருத்து
ஒவ்வாதென்க.
 

ஒருசாரார்  உகரம்   நகரத்தொடும்,  ஊகாரம்  வகரத்தொடும்  நவிலா
என நிரனிறையாகப் பொருள் கொள்ள வேண்டுமென்பர். மற்றுமொருசாரார்
இந்நூற்பா இடைச்செருகல்  என்றும்  தத்தமக்குத்  தோன்றியவாறு கூறுவர்.
இவையாவும்    தமிழ்ச்  சொற்களின்    அமைப்பினையும்    நூற்பாவின்
நுண்மையையும் ஆசிரியரின்  அறிவியல் நோக்கையும் ஓராது கூறிய போலி
உரைகளாம்.   வகர   உகரஈறு   விதியீறே என்பதை எனது சார்பெழுத்து
ஆய்வுக் கட்டுரையுள் கண்டு கொள்க.