சூ. 77 :எஞ்சிய வெல்லாம் எஞ்சுத லிலவே
(44)
 

க-து:

மேல்   எடுத்தோதியவையல்லாத   உயிர்கள்   மெய்யொடு  கூடி
ஈறாமாறு கூறுகின்றது.
 

பொருள்: ‘கவவோடியையின்’ ஒளவுமாகும் என்பது முதலாக இதுகாறும்
விதந்து  கூறப்பட்ட  ஒள,  எ, ஓ,   ஏ, ஒ உ, ஊ  என்பவை   தவிர்ந்த
அஆஇஈஐ   ஆகிய   ஐந்து   உயிர்களும்   எல்லா மெய்களோடும் கூடி
ஈறாதற்குக் குறைவில.
 

எஞ்சியவை  எல்லா  மெய்யொடும்  ஈறாம்  என்றாற்போலக்  கூறாமல்
‘‘எஞ்சுதல் இல’’ என எதிர்மறை முகத்தாற் கூறினமையின்  ஙகரம்  ஒழிந்த
ஏனைய மெய்களே கொள்க.
 

எ - டு:  தக, பச, தட,  அண, புத, தப, கம, துய,  துர, கல, தவ, மழ,
உள,   பிற,  அன்ன  என  அகரம்  வரும்.  நகரம் - நக்கீரன் நப்பசலை
என்றாற்போல  இடைச்சொல்லாய்   அகரத்தொடு   வரும்.  ஞகரத்தொடு
அகரம் வந்துழிக்காண்க. கா, சா, தடா, நுணா, தா, நா, பா, மா,  யா, அரா,
உலா, உவா, விழா, தளா, புறா, கனா என ஆகாரம்  வரும்.  ஞகரத்தொடு
வருவழிக்  கண்டுகொள்க.  ஆகி, பாசி, கடி, அணி, மதி, இப்பி, உமி, நாயி,
கரி, கலி, புவி, கழி, மறி,  நனி  என  இகரம்  வரும்.  ஞகர  நகரத்தொடு
வந்துழிக்காண்க.  சீ,  உடீ, தீ, நீ, பீ, மீ, குரீ,   வீ  என  ஈகாரம்  வரும்.
ஏனையவற்றொடு  வந்துழிக்காண்க.  கை, அசை,  விதை, மஞ்ஞை, உடை,
கணை, தை, நை, பை, மை, ஐயை, சுரை, மலை, வை, மழை, மிளை, இறை,
சுனை  என   ஐகாரம்   வரும்.   இவற்றுள்  எடுத்துக்காட்டு  இல்லாதன
மொழியாக்கம்  பெறவில்லை  என்பதன்றி  வாராமைக்கு  ஏதுவின்மையான்
வந்துழிக்காண்க என்று கூறப்பட்டது.
 

இனி   ‘எல்லாம்’    என்ற    மிகையான்,    மொழிக்கீறாகா   என்ற
உயிர்மெய்களும் - இறுதியும் முதலுமாகா ஙகரமும் தம்பெயர் மொழிதற்கண்
ஈறாக நின்று புணரும்  எனக்கொள்க.  மிகப்பெரிது,  நுப்பெரிது,  வுச்சிறிது
எனவும் ஙக்களைந்தார் எனவும் வரும்.
 

இந்நூற்பாவிற்கு   உரையாசிரியர்,   ஈறாகாதெனப்பெற்றவை தம்பெயர்
கூறும் வழி எஞ்சுதல் இல எனக் கூறுவர். அதுகுன்றக் கூறலாம் என்க.