சூ. 86 :இஈ எஏ ஐஎன இசைக்கும்

அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன

அவைதாம்

அண்பல் முதல்நா விளிம்புற லுடைய 
(4)
 

க-து: 

உயிருள் ஐந்தற்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
 

பொருள்:உயிர்  எழுத்துக்களுள்  இஈ  எஏ ஐ  என்று சொல்லப்படும்
அவ்ஐந்து எழுத்துக்களும் மேற்கூறியவற்றொடு ஒத்த தன்மையவாம்; அவை
அண்பல்லடியை   நாவினது    விளிம்பு    பொருந்துதலாகிய    முயற்சி
உடையவாய்ப் பிறக்கும்.
 

அகரஆகாரம்  போலாது  அங்காத்தல் முயற்சி ஓரளவே உடைமையின்
அவற்று ‘‘ஓரன்ன’’  என்றார்.  நாவிளிம்பால்  அணுகப்படும்பல்  அண்பல்
எனப்பட்டது.   இசைத்தல்=சொல்லப்படுதல்.  அவைதாம்,   எனப்பிரித்துக்
கூறியதன்  கருத்து,  அடுத்துவரும்  எழுத்துக்கட்கும்  அங்காப்பு  முயற்சி
உண்டு  என  உணர்த்துதற்காம்.  இயலும்  என்றது  மேற்சூத்திரத்தினின்று
கூட்டிக்   கொள்ளப்பட்டது.   இது    பிறப்பியலாதலின்   நெடுங்கணக்கு
முறையானன்றிப்   பிறப்பிக்கும்  உறுப்பு  அடிப்படையில்  எழுத்துக்களை
நிரல்படுத்து இலக்கணம் கூறுகின்றார்.