சூ. 94 :

அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் 

(12)
 

க-து:

மெய்களுள் றகரனகரங்களுக்கு வினைக்கள முயற்சி கூறுகின்றது.
அண்ணமும்    நாவுமாகிய   உறுப்புக்களின்   அடிப்படையிற்
பிறப்புவிதி   கூறத் தொடங்கியமையின்   நெடுங்கணக்குமுறை
நோக்காது  உறுப்பமைதி  நோக்கித் தகரனகரங்களின் பின்னர்
றகரனகரங்களின் முயற்சி கூறுகின்றார் எனஅறிக.
 

பொருள்:றகரம் னகரம் ஆகிய இரண்டு மெய்யெழுத்துக்களும் நாவின்
நுனி  (சிறிது  வளைந்து)  மேனோக்கி   எழுந்து   அசைந்து    விரிந்து
அண்ணத்தை நன்கு தொட்டு நிற்கப் பிறக்கும்.
 

அணருதல்=மேல்நோக்கி  அசைந்து  விரிதல்  (அண்ணத்தை நோக்கிச்
செல்லுதல் அணர்தலாயிற்று) மேல்நோக்கி எழுதல் இரண்டற்கும், அசைதல்
றகரத்திற்கும் ஏற்புழிக் கோடல் என்னும் உத்தியாற் கொள்க.