சூ. 100 :அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப
(8)
 

க - து :

அகனைந்திணைக்குரிய   தலைமகளது இயல்பாமாறு கூறுகின்றது.
 

பொருள் :அச்சமும்,    நாணமும், மடனும் முதன்மைபெற்று நிகழ்தல்
எஞ்ஞான்றும் தலைமகளுக்குரிய இயல்புகளாம் எனக் கூறுவர் புலவர்.
 

இவை   முந்துறுதல். எனவே அவற்றைச் சார்ந்து நிற்பன பிறவும் உள.
அவையும் தலைமகளுக்குரிய என்பது பெறப்படும். அவையாவன :பயிர்ப்பும்,
பேதைமையும், பொறையும் பிறவுமாம்.
 

அச்சமாவது; அன்புகாரணமாகத் தோன்றும்   உட்கு.    நாணமாவது :
பெண்மைக்குப்     பொலிவுதரும்   உள்ளப்பாங்கு,  மடனாவது:  செவிலி
முதலானோர்   உணர்த்துவனவற்றை    ஆராயாது    மேற்கொள்ளுதலும்
அங்ஙனம் கொண்டவற்றை இறுகப்பற்றி யொழுகுதலுமாம்.
 

பயிர்ப்பாவது:    பயிலாதவற்றின்     மேற்கொள்ளும்    அருவருப்பு,
பேதைமையாவது;       பிள்ளைத்தன்மை,     பொறையாவது:   வறுமை
முதலாயவற்றைப் பொறுத்தொழுகுதல்.

 

இருவர்க்கும்    உரியவாகக்   கூறப்படும் ஒப்புமைகளுள் ஆண்மையும்
ஒன்றாகலின்    அவ்ஆளுமைத்திறன்    தலைவிக்குரியதாக  நிகழுமிடத்து
அச்சம் முதலாய இயல்புகள் முந்துறாது அடங்கி நிகழுமென்க.  வேண்டாப்
பிரிவின் கண்ணும் ஊடற் கண்ணும் சில முந்துறுதலும் சில    பிந்துறுதலும்
சான்றோர் செய்யுட்களான் அறிந்துகொள்க.
 

இவை  இரண்டு சூத்திரங்களானும் கூறப்பெற்ற தலைமக்கள் இயல்புகள்,
மேல் வரும்  ஒழுகலாறுகட்கு அடிப்படையான    இலக்கணக்    கூறுகள்
எனக்கருதாமல் இவை உள்ளப் புணர்ச்சிக்கும்      மெய்யுறுபுணர்ச்சிக்கும்
ஏதுவாகக் கூறப் பெற்றனவாகக் கொண்டு  உரையாசிரியன்மார் மிகைபடவும்
மற்றொன்று விரித்தும் நூல்நெறிக்கு ஒவ்வா விளக்கம் கூறிச் சென்றனர்.